பதைபதைக்க வைத்த கொடநாடு கொலை.... முக்கியக் குற்றவாளி கேரளாவில் கைது - வீடியோ
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களா கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஜிஜின் என்னும் குட்டியை கோத்தகிரி போலீசார், கேரளாவில் கைது செய்தனர்.
கோத்தகிரி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜிஜின் என்னும் குட்டியை போலீசார் கேரளாவில் கைது செய்தனர். அவரிடம் விசரணை நடத்தப்பட்டு அவரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவர் என தெரிகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி ஓய்வெடுக்கச் செல்லும் ஊர் கொடநாடு. இங்கு ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டமும் அதில் ஒரு மிகப் பெரிய பங்களாவும் உள்ளது. அதில் ஜெயலலிதாவுக்குசொந்தமான பல பொருட்களும் ஆவணங்களும் பணமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதி அங்கு காவலாளியாக வேலை பார்த்த ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் பலத்த காயமடைந்தார். ஜெயலலிதாவின் பங்களாவில் கொள்ளையடிக்கவே இங்கு கொலை நடந்தது என கோத்தகிரி காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர். இவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்று அறிவிக்கப்படு தேடப்பட்டு வந்த நிலையில் ஆத்தூரில் சாலை விபத்து ஏற்பட்டு இறந்தார்
மற்றொரு குற்றவாளியான ஜிஜின் என்னும் குட்டி கேரளாவில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. அதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில் இன்று அவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டு, அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். குட்டியுடன் சேர்த்து ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.