கொடநாடு பங்களாவில் ஃபைல்கள் வெளியே போனதா...புதிதாக உள்ளே வந்ததா? நடிகர் ரஞ்சித் பகீர்: வீடியோ
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் இருந்த ஃபைல்கள் கொள்ளை போனதா அல்லது யாரேனும் புதிதாக உள்ளே வைத்தார்களா என அரசு விசாரிக்க வேண்டுமென ஓபிஎஸ் ஆதரவாளர் நடிகர் ரஞ்சித் கூறியுள்ளார்.
ஊட்டி: ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்தார்களா அல்லது எதையவது உள்ளே வைத்துவிட்டுச் சென்றார்களா என அரசு விசாரிக்க வேண்டும் என ஒபிஎஸ் ஆதரவாளர் நடிகர் ரஞ்சித் கூறியுள்ளார்.
ஊட்டியில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியைச் சேர்ந்த நடிகர் ரஞ்சித், அந்த அணியினர் நடத்திய செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தினகரன் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அதற்காக அவர் கட்சியைச் சேர்ந்தவர் என்று அர்த்தம் இல்லை.மீண்டும் அவர் சிறைக்குப் போவார். வெளியே வருவார். இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்.
அவருக்கு அவர்மீதுள்ள வழக்குகளையும் சொந்த பிரச்சனைகளையும் சமாளிக்கவே நேரம் போதாத போது அவரால் மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தமுடியாது. அடிப்படையில் அவர் அதிமுக உறுப்பினரே கிடையாது. அவர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து விலக்கிவைக்கப்பட்டவர். மக்கள் அவரை ஒரு கொள்ளைக் கூட்டத்தவராகத்தான் பார்க்கிறார்கள்.
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் சாதாரணமான விஷயம் கிடையாது. ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், அவருடைய உடைமைகளுக்கே பாதுகாப்பில்லை என்பது எத்தனை பெரிய ஆபத்தான விஷயம்?
ஜெயலலிதாவின் பங்களாவில் இருந்து எதையும் கொள்ளையடித்துப் போனார்களா அல்லது அவருடைய பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் யாரேனும் எதையாவது வைத்துவிட்டுப் போனார்களா என்பதை இந்த அரசு விசாரிக்க வேண்டும் என கூறினார்.