கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை.. கவலையில் உறவினர்கள்
கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிப்பது சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கொடுங்கையூர் மீனாம்பாள் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தின்போது எதிர்பாராதவிதமாக சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் ஏகராஜ் பலத்த காயமடைந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மேலும் 3 தீயணைப்பு வீரர்கள், 6 காவலர்கள் உள்பட 47 பேர் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேக்கரி கடை உரிமையாளர் ஆனந்தன் உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை கொடுங்கையூர் சோலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன் செம்பியம், முகுந்தம்மன் நகரை சேர்ந்த பாஸ்கர் ஆகியோரும் உயிரிழந்தனர். இதனால் பேக்கரி தீவிபத்தில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில், சிகிச்சை பலனளிக்காமல் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன்(24) என்பவரும் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.