கூத்தாண்டவர் கோவில் கூவாகம் திருவிழா தொடங்கியது…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொடியேற்றம் சாகை வார்த்தலுடன் நேற்று தொடங்கியது.
உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை பௌர்ணமியையொட்டி சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும்
இந்த திருவிழாவிற்கு இந்தியாவில் புதுடெல்லி, மும்பை, கல்கத்தா, கேரளா, பெங்களூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திருநங்கைகள் இங்கு வந்து கூடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா செவ்வாய்கிழமை
கொடியேற்றம் சாகை வார்த்தலுடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு கூவாகம், தொட்டி, நத்தம், அண்ணாநகர் உட்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படையலிட்டனர். மாவிலக்கு ஏற்றி வழிபட்டனர்.
போரில் களப்பலி
மகாபாரத போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில், இக்கோவில் சித்திரை பெருவிழாவின் 16ம் நாளில் அழுகளம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ஆண்டு மே 14ம் நாள் இந்த முக்கிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தாலிகட்டும் நிகழ்வு
விழாவின் முக்கிய திருவிழாவாக 13ம் தேதி இரவு சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மும்பை, சென்னை, டில்லி, கல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர்.
தேரோட்டம், களப்பலி
வரும் 14ம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு நடக்கும் அழுகளம் நடைபெறும். திருநங்கைகள் தங்கள் அணிந்திருந்த தாலிகளை அறுத்தெறிந்து ஒப்பாரி வைத்து அழுவார்கள். பின்னர் கிணற்றில் குளித்து விட்டு விதவைக் கோலம் பூண்டு தங்கள் ஊருக்கு திரும்புவர்.
படையல்சாதம்
அன்றைய தினம் மாலையில் உறுமைசோறு (பலிசாதம்) படையல் நடக்கிறது. இதை வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அரவான் உயிர்பித்தல்
இரவு 7 மணிக்கு காளிக்கோவிலில் அரவான் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அரவான் சிரசு மட்டும் பந்தலடிக்குச் கொண்டு வரப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்வித்து நத்தம், தொட்டி வழியாக கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும்.
தர்மர் பட்டாபிஷேகம்
தொடர்ந்து 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.
18 நாட்கள் திருவிழா
கூவாகம், பெரியசெவலை, திருவெண்ணெய்நல்லூர், கொரட்டூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் நேற்று முதல் 18 நாட்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிடுவர். கூத்தாண்டவர் நினைத்ததை நிறைவேற்றுவதால் அவரை பக்தியுடன் ஆண்டுதோறும் விழா எடுத்து வழிபடுகின்றனர்.