வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கொசஸ்தலை ஆற்றின் பாலம்: 50 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
திருத்தணி: திருத்தணி அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றின் பாலம் வெள்ளத்தில் சேதமடைந்தது. இதனால் 50-க்கும் அதிகமான கிராம மக்கள் போக்குவரத்து வசதி இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையின் காரணமாக திருத்தணியை அடுத்து உள்ள முத்துகொண்டாபுரம் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் உடைந்தது.
இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன போக்குவரத்து முடங்கியது. அந்த மேம்பாலம் நேற்று முன்தின் பலத்த சேதமடைந்து மேலும் உடைந்ததால், அவ்வழியாக போக்குவரத்தை தடை செய்ய மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து திருத்தணி கோட்ட நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் உமாசெல்வன் மேற்பார்வையில், மேம்பாலத்தின் இரு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தடுப்பு சுவர் எழுப்பப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் திருத்தணிக்கு சென்று, அங்கிருந்து அரக்கோணம் வழியாக திருவாலங்காட்டுக்கு சுமார் 50 கிமீ தூரம் சுற்றி வரவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து திருப்பிவிடப்பட்டதால் அந்த வழியாக பயணம் செய்யக்கூடிய 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கடும் வெள்ளப்பெருக்கில், 5 அடி உயரத்திற்கு ஓடும் தண்ணீரில் மக்கள் நடந்து சென்று தங்கள் பயணத்தை மேற்கொள்கிறார்கள். சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைத்துத்தர வேண்டும் எனவும் பாலத்தை உயர்த்தி கட்டித் தரவேண்டும் எனவும் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.