வேலை கேட்ட சிறுமியை சீரழித்த வாலிபர்... ஆயுள் தண்டனை விதித்தது கோவை மகிளா கோர்ட்!
கோவை: கோவையில் வேலை தேடிவந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை அளித்து கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் நெம்மாரா புதுப்பாடிக் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.
அங்கு வேலை இல்லாத நிலையில் தனது தோழியுடன் சிறுமி கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வேலை தேடி பொள்ளாச்சி வருவதற்காக நெம்மாரா பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது பொள்ளாச்சி சக்தி நகர் ஜீவா வீதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி முத்துக்குமார் என்பவருடன் சிறுமிக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. சிறுமிகள் இருவருக்கும் பொள்ளாச்சியில் நல்ல இடத்தில் வேலை வாங்கித் தருவதாக முத்துக்குமார் கூறியுள்ளார்.
நான் பொள்ளாச்சிக்கு வரமாட்டேன் என்று கூறிய சிறுமியின் தோழி தன் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார். ஆனால் ரேகா மட்டும் முத்துக்குமாருடன் பொள்ளாச்சி வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியை வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி முத்துக்குமார் அந்த சிறுமியை பாலியல் உறவுக்கு உட்படுத்தியுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமியை அவர் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் உறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து முத்துக்குமாருக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் விஷயம் சிறுமிக்கு தெரிய வந்தது. முத்துக்குமாரின் வீட்டாருக்கும் இப்பிரச்னை தெரியவந்தது.
இந்நிலையில் சிறுமிக்கு தான் அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி கோவை போலீஸாரிடம் சிறுமியை முத்துக்குமார் ஒப்படைத்தார். முன்னதாக பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று சிறுமியை அவர் மிரட்டியுள்ளார்.
இதற்கிடையில் சிறுமி காணாமல் போனதாக அவரது தாயார் கேரள போலீஸில் புகார் அளித்திருந்த நிலையில் கோவை போலீஸார் சிறுமியை கேரளப் போலீஸார் மூலமாக தாயாரிடம் ஒப்படைத்தனர். தனது தாயாரிடம் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை சிறுமி தெரிவித்துள்ளார்.
அதையடுத்து சிறுமியின் தாயார் கேரளப் போலீஸில் புகார் கொடுத்தார். இச்சம்பவம் நடைபெற்ற இடம் பொள்ளாச்சிப் பகுதி என்பதால் இவ்வழக்கு பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. குழந்தைகள் பாலியல் வன்கொடுமைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீஸார் முத்துக்குமாரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சரோஜினி ஆஜரானார். இவ்வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10000 அபராதமும் விதித்து நீதிபதி எம்.பி.சுப்ரமணியன் தீர்ப்பளித்தார்.