வளர்ப்பு மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்... கட்டிடத் தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை!
கோவை: வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தையை, கல்லால் அடித்துக் கொலை செய்த உறவினரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
காரைக்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வம் (45). கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த சுமதி (40) என்ற பெண்ணை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சுமதிக்கு முதல் கணவர் மூலம் 2 மகள்கள் உள்ளனர். 2வது கணவர் செல்வம் மற்றும் முதல் கணவருக்குப் பிறந்த இரண்டு மகள்களுடன் கோவை ஒண்டிப்புதூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் சுமதி.
இந்நிலையில், நேற்று ஒண்டிப்புதூர் பாலம் அருகே செல்வம் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில், செல்வத்தை அவரது உறவினராக சயானந்தன் என்ற 26 வயது இளைஞர் கொலை செய்தது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து சயானந்தனைப் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சயானந்தன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது :-
செல்வத்தின் மனைவி சுமதி எனக்கு சகோதரி முறை. சுமதியின் மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. தற்போது 18 வயதாகும் இளைய மகள் மற்றும் கணவருடன் சுமதி வசித்து வந்தார்.
இந்நிலையில் சமீபகாலமாக வளர்ப்பு மகளான சுமதியின் இளைய மகளிடம் செல்வம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்துள்ளார். இது குறித்து அப்பெண்ணே என்னிடம் கூறி அழுதார். நானும் இது தொடர்பாக செல்வத்தைக் கண்டித்தேன். ஆனால், அதனைக் கண்டு கொள்ளாத செல்வம் தொடர்ந்து வளர்ப்பு மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்த அந்த பெண் என்னிடம், வளர்ப்பு தந்தை செல்வத்தின் பாலியல் தொல்லைகளை கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதைக்கேட்ட எனக்கு செல்வம் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று இரவு ஒண்டிப்புதூர் பாலம் அருகே நான் வந்து கொண்டிருந்த போது செல்வமும் அந்தப் பாதையில் வந்தார். அவரிடம் ‘சுமதியின் மகளை ஏன் தொந்தரவு செய்கிறாய்?' என கேட்டேன். அதற்கு அவர் தகாத வார்த்தைகளால் என்னை திட்டினார்.
இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தவே, கீழே கிடந்த கல்லை எடுத்து அவரை தாக்கினேன். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். ஆனபோதும் ஆத்திரம் அடங்காத நான் தொடர்ந்து அவரைக் கல்லால் அடித்துக் கொன்றேன்' எனத் தெரிவித்துள்ளார்.