கோவை ரயில் மறியல் போராட்டத்தில் தள்ளு முள்ளு... பெண்களை ஆண் போலீஸ் இழுத்துச் சென்ற கொடூரம்
கோவை: மத்திய அரசைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெண் போராட்டக்காரர்களை ஆண் போலீசாரே இழுத்துச் சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக நடந்து கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இரண்டு நாள் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாய சங்கங்கள் அறிவித்த இந்தப் போராட்டத்தில் பாஜக, அதிமுக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும், சமூக இயக்கங்களும் கலந்து கொண்டு அந்தந்த மாவட்டங்களில் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று கோவையில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்த கோவை மாவட்ட மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் கோவையில் ஒன்று திரண்டனர். பின்னர், ஊர்வலமாக ரயில் நிலையம் நோக்கிச் சென்றனர்.
அப்போது, ரயில் நிலையத்திற்கு சற்று முன்பாக வந்த ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள், மேற்கொண்டு போராட்டக்காரர்கள் செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு அரண்களை வைத்து தடுத்தனர். அதனைத் தாண்டி போராட்டக்காரர்கள் சென்று ரயில் மறியலில் ஈடுபடு முயன்ற போது, போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து வாக்குவாதமும் நடைபெற்றது. மேலும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை எல்லாம் ஆண் போலீசார் தர தரவென இழுத்துச் சென்ற கொடூரமும் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தால் அந்த இடமே ஒரு போராட்டக் களமாக மாறியது. இதனையடுத்து, போலீசார் அனைத்துக் கட்சித் தொண்டர்களை கைது ஒரு மண்டபத்தில் வைத்துள்ளனர்.
500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், போலீசாரின் அராஜகப் போக்கைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.