இல்லீங்... என்ட்ர ஊரு கோயமுத்தூருங்கோ... மயக்கும் கொங்குத் தமிழ் #தாய்மொழிதினம்
உலக தாய்மொழி நாளில் கோவை தமிழின் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: உலக தாய் மொழி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் இயல்பான மரியாதையோடு தவழ்ந்தாடும் கோவை பாஷை குறித்த சில சுவாரசிய தகவல்கள்
தமிழக மக்கள் தமிழ் மொழியே பேசினாலும் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு. அவர்கள் பேசும் பாஷையும் வித்தியாசமானது.
சென்னை என்றால் இன்னா? நெல்லைக்கு ஏலே.. கோவைக்கு சென்றால் ஏனுங்க, இல்லீங், அம்மணி என ஒவ்வொரு மண்டல மக்களும் தங்களுக்கான பாஷையில் அள்ளி தெளிப்பார்கள்.
மரியாதை கலந்த கோவை பாஷை
கொங்கு மண்டலத்துக்குள் வரும் கோவையில் கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும். கோவை மக்கள் பேசும் சாதாரண வார்த்தைகளிலேயே இயல்பான மரியாதை கலந்து மண் மணம் வீசும்.
வெள்ளந்தி தனத்தைக் காட்டும்
கோவை பாஷையில் மரியாதை மட்டுமின்றி அன்பும் கலந்தே இருக்கும். அவர் கேள்வியாகட்டும் அல்லது பதிலாகட்டும் அந்த பாஷையே ஒரு வெள்ளந்தி தனத்தைக் காட்டும்.
ஏனுங் நமக்கு கோயம்புத்தூருங்களா?
முன்பின் தெரியாதவர்களின் பேச்சில் மண் மணம் தெரிந்தால் போதும் ஏனுங் நமக்கு கோயம்புத்தூருங்களா? என கேட்பதிலேயே எதிரிலிருப்பவர் விழுந்து விடுவார் அப்படி ஒரு சிறப்பு பெற்றது கொங்கு மண்டலத்தின் கோவை தமிழ்.
கோவை சரளாவின் வட்டார மொழிவளம்
கோவை தமிழ் உச்சரிப்புகளை ரசிக்காது காதுகள் இருக்காது. எத்தனையோ காமெடி நடிகைகள் இருந்தும் கோவை சரளா இன்றளவும் மார்க்கெட்டில் இருப்பதற்கு அவரின் வட்டார மொழிவளமே காரணம் என்பது யாரும் மறுக்க முடியாது.
சதி லீலாவதி - படையப்பா
சதி லீலாவதி படத்தில் கமலும் கோவை சரளாவும் கோவை தமிழில் பின்னி பெடலெடுத்திருப்பார்கள். அதேபோல் படையப்பா படத்தில் அனுமோகன் ரஜினியிடம் கேட்கும் படையப்பர்ரே பாம்பு புத்துக்குள்ள கையவுட்டீங்களே பாம்பு கடிக்லீங்களா என்ற டயலாக்கும் மண் மணத்தை கமிழச் செய்தது.
மறக்கப்படும் வட்டார வழக்கு
சென்னையில் பல தரப்பட்டட மக்கள் வாழ்ந்தாலும் வட்டார தமிழை பேசினால் கிராமத்தான் என்ற முத்திரை வரும் என்பதற்கு அஞ்சி பலர் சொந்த பாஷையை மறந்து வருகின்றனர் என்பது சோகம்...