கோவை கலவரத்தில்.. செல்போன் கடைக்குள் புகுந்து திருடிய இந்து முன்னணியினர் !
கோவை: கோவை இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் இறுதி ஊர்வலத்தின் போது பூட்டியிருந்த கடைக்குள் புகுந்த இந்து அமைப்பினர் சிலர் அங்கிருந்த செல்போன்கள் மற்றும் பொருட்களை திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோவையில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் மர்மநபர்கள் சிலரால் வியாழக்கிழமை அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து கோவையில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. மொத்தம் 20 பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
கடைகள், வணிக நிறுவனங்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் கோவை நகர் முழுவதும் நேற்று காலை முதல் 90 சதவீதத்துக்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டிருந்தன. சில இடங்களில் திறந்து இருந்த கடைகள், ஒரு ஏ.டி.எம். ஆகியவையும் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸ் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. பலத்த கலவரத்துக்கு இடையே சசிகுமாரின் உடல் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்பட்டது.
ஊர்வலத்தின் போது மூண்ட கலவரத்தின் இடையே துடியலூரில் பூட்டியிருந்த ஒரு செல்போன் கடைக்குள் புகுந்த இந்து முன்னணியினர் சிலர் அங்கிருந்த செல்போன்களை திருடியுள்ளனர். ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அவர்கள் சூறையாடினர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செல்போன் கடையை சூறையாடும் வீடியோ காட்சி: