மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை – கோவை நீதிமன்றம் தீர்ப்பு
கோவை: கோவையில் இரண்டாம் திருமணம் செய்ய மனைவியை எரித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை சரவணம்பட்டி, விநாயகபுரத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவருடைய மகள் ராஜேஸ்வரி . இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மாத கர்ப்பமாக இருந்தபோது முதல் கணவர் பிரிந்துசென்றார்.
குழந்தை திவ்ய தர்ஷினியுடன் ராஜேஸ்வரி தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் கட்டிட வேலை செய்து வந்த மோகன் என்பவருடன் ராஜேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது.
மோகன், ராஜேஸ்வரியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அப்போது தனக்கு 4 வயது குழந்தை இருப்பதாகவும், அந்த குழந்தையையும் மகள்போல் ஏற்க சம்மதம் தெரிவித்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வதாகவும் ராஜேஸ்வரி கூறினார்.
ராஜேஸ்வரியின் முதல் கணவனின் குழந்தையை தன்னுடைய குழந்தையாக ஏற்றுக்கொள்வதாக மோகன் கூறியதை தொடர்ந்து, ராஜேஸ்வரி மோகனை மறுமணம் செய்துகொண்டார்.
நாளடைவில் ராஜேஸ்வரியிடம், ‘'யாருக்கோ பிறந்த குழந்தையை நான் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறி குழந்தை திவ்ய தர்ஷினியையும் கொடுமைப்படுத்தினார். இதைத்தொடர்ந்து குழந்தை பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தது.
ராஜேஸ்வரிக்கு உடலில் கரும்புள்ளிகள் இருந்ததால், அவருக்கு குழந்தை பிறந்தால் குழந்தை அழகாக இருக்காது என்று கூறியும் மனைவியை கொடுமைப்படுத்தினார்.
தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து கடிதம் எழுதி தருமாறும், அவ்வாறு தரவில்லை என்றால் கொலை செய்யப்போவதாகவும் ராஜேஸ்வரியை மோகன் மிரட்டியுள்ளார்.இரண்டாம் திருமணத்திற்கு ராஜேஸ்வரி ஒத்துக்கொள்ளாத நிலையில் கடந்த 2013 ஆண்டு ராஜேஸ்வரி மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொளுத்திவிட்டு மோகன் தலைமறைவானார். அக்கம் பக்கம் இருந்தவர்களால் மீட்டு அரசு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இறப்பதற்கு முன்பு ராஜேஸ்வரி கணவர்தான் தீவைத்து கொளுத்தியதாக சரவணம்பட்டி போலீசாரிடம் மரண வாக்குமூலம் அளித்தார்.
இந்த கொலை வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
கொலை குற்றம்சாட்டப்பட்ட மோகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.பி.சுப்பிரமணியம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மோகன் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.