கோவில்பட்டியில் தியாகிகள் மணிமண்டபம் அமைக்க மக்கள் கோரிக்கை
வெள்ளையனே வெளியேறு போராட்ட தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் வேலையில் கோவில்பட்டியில் தியாகிகளுக்கான மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
கோவில்பட்டி: நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு போராட்ட தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. இதையொட்டி தியாகிகள் மணிமண்டபம் அமைக்க கோவில்பட்டியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலைப் பெறுவதற்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரானார், உ.வே.சாமிநாத அய்யர் போன்றோர் சொல்லொனா துயரத்திற்கு ஆளாகினர்.
இருப்பினும் தியாகிகள் தொடர் போராட்டத்தால் ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றோம். சுதந்திரப் போராட்டத்தை ஒருங்கிணைத்த பெருமை நெல்லை மாவட்டத்திற்கு உண்டு.
1942ல் நாடு முழுவதும் காந்தியடிகள் தலைமையில் அடக்குமுறையை எதிர்த்து வெள்ளையனே வெளியேறு எனும் கோஷத்தை முன் வைத்து போராட்டம் நடந்தது. அப்போது, கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் வசித்த வெயிலு முதலியார் தலைமையில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்தது.
அப்போது ஆங்கிலேய நிர்வாகம் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயம் அடைந்தனர். மீதமுள்ளவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போராட்டம் நடந்து 70 ஆண்டுக் காலம் கடந்துள்ள நிலையில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தியாகிகளைத் தமிழக அரசு கவுரவித்தது. அந்த வகையில் கடலையூரில் வெயிலு முதலியாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.