திண்டுக்கல்லில் கரைவேட்டிகள், போலீஸ் அதிகாரிகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டிய மக்கள்
திண்டுக்கல்: நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து மக்கள் விரட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தமிழக அரசு வலுக்கட்டாயமாக ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிட்டது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஊருக்கு வரும் சாலைகளில் குழியை தோண்டி வைத்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அங்கு வராதபடி பார்த்துக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இது குறித்து அறிந்த கோவில்பட்டி கிராம மக்கள் வாடிவாசலை மறித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்துவது குறித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.
மக்களோ அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியுள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத அதிமுகவினர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.