அதிமுக ஆபீசுக்கு போனது, முக்கிய நபரிடம் மனு கொடுத்தது உண்மை-ஆனால் கட்சியில் சேரவில்லை: குமரிஆனந்தன்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நான் சென்றது உண்மை; முக்கியமான நபர் ஒருவரை சந்தித்து மனு கொடுத்தது உண்மை; ஆனால் அதிமுகவில் சேரவில்லை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தமக்கு நாடார் சமூகத்தின் ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குமரி ஆனந்தன் உள்ளிட்ட நாடார் சமூக அரசியல்வாதிகளை அதிமுகவில் சேர்க்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது குறித்து குமரி ஆனந்தன் அளித்திருக்கும் விளக்கம்:
நான் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்றது உண்மைதான். ஆனால் சென்ற காரணம் வேறு.
ஜெ.வுக்கு நன்றி
பாரதமாதாவுக்கு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் சிலை வைக்க அனுமதி கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இதற்கு நன்றி தெரிவிக்க வேண்டியது என் கடமை.
2 தியாகிகள்
மதுரையில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட சொர்ணத்தம்மாள், காஞ்சிபுரத்தில் தீண்டாமை ஒழிப்புக்காவும், சுதந்திரத்துக்காகவும் பாடுபட்ட காந்தியின் சீடரான கிருஷ்ணசர்மா ஆகியோருக்கு எந்த ஒரு கெளரவமும் வழங்கப்படவில்லை. அவர்களின் சிலைகளை நிறுவி அவர்களுக்கு மரியாதை செலுத்தவும், எதிர்கால தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டியதும் நமது கடமை. அதை அரசுதான் செய்ய வேண்டும். இந்த இரு விஷயங்களுக்காகவும் முதல்வருக்கு மனு கொடுக்க விரும்பினேன்.
முக்கிய நபரிடம் மனு
அதற்காகத்தான் அ.தி.மு.க அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். அங்கிருந்தவர்கள், 'நாங்களே உங்களைத் தொடர்பு கொள்கிறோம்' என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். இரு நாட்களுக்குப் பிறகு என் வீட்டுக்கு வந்த அதிகாரி ஒருவர் என்னைக் கூட்டிச்சென்று, முக்கியமான நபர் ஒருவரிடம் அந்த மனுவைக் கொடுக்கச் செய்தார். அவரும் அதைக் கண்டிப்பாகச் செய்து தருவதாக உறுதி அளித்து இருக்கிறார்.
வேறுவழி போகாது...
காந்தி, காமராஜரின் வழிவந்தவன் நான். காமராஜரின் கார் எண் கொண்ட இந்த வண்டி ஒரு நாளும் வேறு வழி தவறிப் போகாது.
இவ்வாறு குமரி ஆனந்தன் கூறியுள்ளார்.