திருட்டு திருமணங்கள்...கும்பகோண வீரசைவ மடத்தில் மடாதிபதிகளிடையே அக்கப்போர்
கும்பகோணம்: கும்பகோணம் வீரசைவ மடத்தில் ரகசிய திருமணம் செய்ததால் இளைய மடாதிபதி கங்காதரனை நீக்கி மடாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் இளைய மடாதிபதியோ, மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் தொடர்பான விவரங்களை தாம் பகிரங்கப்படுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே வீரசைவ பெரிய மடம் இயங்கி வருகிறது. கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு உள்ள இந்த மடத்திற்கு இலங்கை, கர்நாடகா, திருவாரூர், தாராசுரம் உள்ளிட்ட பல இடங்களில் கிளை மடங்கள் உள்ளன.
2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மடத்தில் லிங்காயத் மரபின்படி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் 97-வது மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள். 98-வது இளைய மடாதிபதியாக கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கங்காதரன் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இளைய மடாதிபதி கங்காதரன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதை அறிந்த மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள், இளைய மடாதிபதி பதவியிலிருந்து கங்காதரனை நீக்கம் செய்தார்.
ஆனால் கங்காதரன் கூறுகையில், மடாதிபதியாக உள்ள நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகளுக்கு திருமணமாகியுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தனது மனைவிக்கு வீடுவாங்க ரூ. 25 லட்சம் வேண்டும் என கேட்டார். அதற்கு பணம் இல்லை என்று நான் கூறியதால் என் மீது கோபம் அடைந்து கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி மடத்தில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டார். பின்னர் நான் பெங்களூரு வந்து என்னுடைய உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். மடத்தை விட்டு வெளியே வந்த பிறகுதான் திருமணம்செய்து கொண்டேன்.
இந்த மடத்தின் மடாதிபதி பற்றிய பல விவரங்களை திருச்சியில் இன்று பேட்டி அளிக்க உள்ளேன் என்றார்.