மதுரை விரைந்த குஷ்பு.. இளங்கோவனைச் சந்தித்தார்.. அரை மணி நேரம் பேசினார்
மதுரை: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் வந்த பிறகுதான் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சி வந்துள்ளது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
கொலை மிரட்டல் வழக்கில் சிக்கிய இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையில் தங்கியிருந்து தினசரி தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்குப் போய் கையெழுத்துப் போட்டு வருகிறார்.
மதுரையில் ஹோட்டலில் தங்கியுள்ள இளங்கோவனை பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகை குஷ்புவும் மதுரை வந்து இளங்கோவனைச் சந்தித்துப் பேசினார். அரை மணி நேரம் அவர் ஹோட்டலில் இளங்கோவனைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது எதற்காக வழக்கு போடப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இது பொய் வழக்கு.
ஏற்கனவே கட்சியில் இருந்தவர்கள் அப்போதே குற்றச்சாட்டுகளை கூறாமல் இப்போது புகார் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதிலிருந்தே இந்த வழக்கு பொய் வழக்கு என தெரிகிறது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக வந்தபிறகு தான் காங்கிரஸ் எழுச்சி பெற்றுள்ளது. அவர் சொல்வதெல்லாம் தலைப்பு செய்திகளாக வருகிறது. அவர் எந்த விஷயத்தை பேசினாலும், ஆதாரத்துடன்தான் பேசுவார் என்பதால் சிலர் பயப்படுகின்றனர். காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட எழுச்சியை திசை திருப்பவே இளங்கோவன் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது என்றார் குஷ்பு.