அதிமுகவை வைத்து.. தமிழகத்தில் சிங்கிள் ரன்னாவது எடுத்துவிட துடியாய் துடிக்கிறது பாஜக… குஷ்பு அட்டாக்
அதிமுகவை பயன்படுத்தி சிங்கிள் ரன்னாவது தமிழகத்தில் எடுத்துவிட பாஜக துடிக்கிறது என்று குஷ்பு விமர்சித்துள்ளார்.
சென்னை; தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் சிங்கிள் ரன்னாவது எடுத்துவிட பாஜக துடிக்கிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போதும், தமிழகத்தில் ஆட்சி நடந்தால்தான் தானே அது பற்றி கருத்து கூற முடியும் என்று கூறிய குஷ்பு, ஜெயலலிதா வெற்றி பெற்றதும் 6 மாதம் வரை வெற்றியை கொண்டாட்டத்திலேயே காலத்தை கடத்தினார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் எதுவும் நடக்கவில்லை.
அதிமுகவில் உள்ளவர்கள் அனைவருக்கும் நாற்காலி சண்டை போடுவதற்கே நேரம் சரியாக உள்ளது என்று குற்றம்சாட்டிய குஷ்பு, தமிழகத்துக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றால் ஆட்சியில் இருந்து அதிமுக போக வேண்டும் என்று கூறினார்.
ஜெ. இருந்த போதே ஒன்றும் நடக்கவில்லை
ஜெயலலிதா உயிருடன் இருந்து ஆட்சி செய்த 5 ஆண்டுகளிலும் தமிழகத்தில் ஒன்றும் நடந்துவிடவில்லை. தமிழகத்தில் இருந்த கம்பெனிகள் எல்லாம் மூடப்பட்டன. பல தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தன. இதனால் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து தொழிலாளர்கள் கஷ்டப்பட்டனர். அதேதான் இப்போதும் தொடர்கிறது.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம்
தமிழக விவசாயிகள் டெல்லியில் போய் போராடினார்கள். தரையில் புரண்டார்கள், புடவை கட்டினார்கள், எலிகளை கடித்தார்கள், பாம்பு கறி சாப்பிட்டார்கள். என்ன நடந்தது. எதுவும் நடக்கவில்லை. விவசாயிகளின் போராட்டத்திற்கு பிரதமர் மோடி இரங்கவில்லை. அவருக்கு எல்லோரையும் பார்க்க நேரம் இருந்தது. ஆனால் விவசாயிகளை சந்திக்க மட்டும் நேரம் கிடைக்காமல் போனது.
முதல்வர் என்ன செய்தார்?
கடமைக்காக டெல்லிக்கு சென்று விவசாயிகளை சந்தித்த பழனிச்சாமி விவசாயிகளுக்காக ஒன்றும் செய்யவில்லை. தன் நாற்காலி காப்பாற்றிக் கொள்ளவே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். ஒரு ஓட்டு போட்ட மக்களுக்கு 3 முதல்வர்களை தந்துள்ளதுதான் அதிமுகவின் ஓராண்டு சாதனை.
சிறையில் தினகரன் ஏன்?
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்துதான் பணத்தை அள்ளி வீசினார்கள் அதிமுகவினர். அதன் விளைவைதான் தினகரன் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
பாஜகவிற்கு வாய்ப்பில்லை
முன்னாள் இன்னாள் முதல்வர்களாக ஓபிஎஸ் மற்றும் பழனிச்சாமி இருவரும் பிரதமரை சந்திக்க அவசர அவசரமாக செல்கின்றனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பாஜக எப்படி ஆட்சியை பிடித்தது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழகத்து மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்.
சிங்கிள் ரன்
ஆனால், எப்படியாவது இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக காலூன்றி நினைக்கிறது. தொடக்க ஆட்டக்காரராக கீழே இறங்கி சிங்கிள் ரன்னாவது எடுக்க வேண்டும் என பாஜக துடியாய் துடிக்கிறது.
கூவத்தூர் பாக்கி வசூல்
தமிழக முதல்வரை எம்எல்ஏக்கள் ஏன் சென்று சந்திக்கிறார்கள். மக்கள் நலனுக்காகவா சந்திக்கிறார்கள். கூவத்தூரில் பேசப்பட்ட பாக்கியை வசூல் செய்வதற்காகவே முதல்வரை சந்திக்கிறார்கள். நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
விரைவில் தேர்தல்
இந்த நிலை மாற தமிழகத்தில் விரைவில் தேர்தல் வர வேண்டும். தமிழகத்தில் உள்ள அதிமுக அரசை யாரும் கவிழ்க்க வேண்டியது இல்லை. அது தானாகவே கவிழ்ந்துவிடும். மக்களே இந்த ஆட்சியை விரட்டியடிப்பார்கள் என்று குஷ்பு கூறியுள்ளார்.