கூவத்தூரில் பேசின பாக்கிய கொடுங்க.. முதல்வரை நச்சரிக்கும் எம்எல்ஏக்கள்.. குஷ்பு அட்டாக்
கூவத்தூரில் பேசினபடி பாக்கிய கொடுங்கள் என்று முதல்வரை சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் கேட்கவே நேரம் சரியாக இருக்கிறது என்று குஷ்பு குற்றம்சாட்டினார்.
சென்னை; தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மக்கள் பிரச்சனைகளுக்காக தொகுதிக்கு செல்வதில்லை. மாறாக கூவத்தூரில் பேசின பாக்கியை வசூலிக்க முதல்வரை சந்திக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போதும், தமிழகத்தில் அதிமுக ஓராண்டு ஆட்சி கிண்டலடித்து குஷ்பு பேசினார். ஜெயலலிதா இருந்த போதே எதுவும் நடக்கவில்லை. இப்போது சுத்தமாக எதுவும் நடக்கவில்லை என்று அவர் கூறினார்.
அதிமுகவில் உள்ளவர்கள் அனைவருக்கும் நாற்காலி சண்டை போடுவதற்கே நேரம் சரியாக உள்ளது என்று குற்றம்சாட்டிய குஷ்பு, தமிழகத்துக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றால் ஆட்சியில் இருந்து அதிமுக போக வேண்டும் என்று கூறினார்.
விவசாயிகள் போராட்டம்
கடமைக்காக டெல்லிக்கு சென்று விவசாயிகளை சந்தித்த பழனிச்சாமி விவசாயிகளுக்காக ஒன்றும் செய்யவில்லை. தன் நாற்காலி காப்பாற்றிக் கொள்ளவே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
பணப்பட்டுவாடா
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்துதான் பணத்தை அதிமுகவினர் அள்ளி வீசினார்கள். அதன் விளைவைதான் தினகரன் இப்போது சிறையில் இருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
பாக்கி வசூல்
தமிழக முதல்வரை எம்எல்ஏக்கள் கும்பல் கும்பலாக சென்று சந்தித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கூவத்தூரில் பேசியபடி பணத்தை கொடுங்கள் என்று கேட்கவே முதல்வர் பழனிச்சாமி சந்திக்கிறார்கள். அவர்கள் யாரும் மக்கள் பிரச்சனைக்காக அவரை சந்திக்கவில்லை.
மக்களே விரட்டுவார்கள்
தமிழகத்தில் இதே போன்ற நிலை நீடித்தால் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழக மக்களே இந்த ஆட்சியை விரட்டியடிப்பார்கள் என்று குஷ்பு கூறியுள்ளார்.