தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் குஷ்புவா? மேலிடம் சென்ற பட்டியலில் பெயர்
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த புதிய தலைவராக குஷ்பு தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செயல்பட்டு வருகிறார். இன்னும் மூன்று மாதத்தில் இளங்கோவனை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய தலைவராக வர வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் குஷ்பு பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மோடி- ஜெயலலிதா சந்திப்பு குறித்து இளங்கோவனின் சர்ச்சைக்குரிய விமர்சனம், காமராஜர் அரங்க வணிக வளாக நிதி முறைகேடு உள்ளிட்ட புகார்களில் சிக்கியுள்ள இளங்கோவனுக்கு தலை மேல் எப்போதும் கத்தி தொங்கி வருகிறது.
மேலும் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக காங்கிரஸ் தலைமையை மாற்றி விட்டு தொண்டர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சும் முடிவில் மேலிடம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே தமிழக பா.ஜ.க. வுக்கு தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளது போன்று தமிழக காங்கிரசுக்கு பெண்ணான குஷ்பு நியமிக்கப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.