“குட்டி சுட்டீஸ்”... மிஸ் பண்ணிடுங்க... கண்டிப்பா சந்தோசப்படுவீங்க!
சென்னை: சன் டிவியில் ஞாயிறு தோறும் மாலையில் ஒளிபரப்பாகி வருகிறது குட்டி சுட்டீஸ். தலைப்பை பார்க்கும் போது குட்டீஸ்களின் சுட்டித்தனமான பதில்கள் நம்மை மகிழ்விக்கும் என எதிர்பார்த்தால் பெரும்பாலான நிகழ்ச்சிகள் நமக்கு எரிச்சல் ஊட்டுவதாகவே உள்ளது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இமான் அண்ணாச்சி கூறும் பேமசான வசனம், "மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் பீல் பண்ணுவீங்க' என்பது. ஆனால், இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் பெரும்பாலானவர்கள் மனதில் தோன்றுவது, "நல்லவேளை இந்த நிகழ்ச்சியில் நம் குழந்தைகளை பங்கேற்க அனுப்பவில்லை" என்பது தான்.
காரணம், பெரும்பாலும் அண்ணாச்சி கேட்கும் கேள்விகள் குழந்தைகளின் மழலைத்தன்மையை மீறியதாகவே உள்ளது. ஏற்கனவே, டிவி, இண்டர்நெட், செல்போன் என சிறு வயதிலேயே குழந்தைத்தனத்தை இழந்து வருகின்றனர் இன்றைய குழந்தைகள் என்பது தான் நம்மில் பெரும்பாலான பெற்றோர்களின் கவலை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகளிடம் பெரும்பாலும் அவர்களது குடும்ப விவகாரங்களைக் கிளறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
உங்கப்பாவுக்கு கேர்ள் பிரண்ட் இருக்கா, அன்னைக்கு ஏன் உங்கப்பா உங்கம்மாவை அடிச்சாரு, உங்கம்மாவுக்கு ஒழுங்கா சமைக்கத் தெரியுமா' என்பது போன்ற கேள்விகளால் குழந்தைகளின் வாயைக் கிண்டுகிறார் அண்ணாச்சி. சமயங்களில் குழந்தைகளும் இயல்பாய் உண்மையைப் போட்டு உடைத்துவிட சங்கடத்தில் நெளிகின்றனர் பெற்றோர்.
(சிறுவர் நல ஆணையம் கோபம்.. சன் டிவி குட்டி சுட்டீஸ் பாணியிலான சூர்யா டிவி சிறுவர் நிகழ்ச்சி ரத்து)
இது தேவையா, இதற்குப் பேர் தான் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்ப்பவர்கள் மனதில் நினைத்துக் கொள்கிறார்கள். டி ஆர் பியை அதிகரிப்பதற்காக இத்தகைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது சரிதானா என்பதை உரியவர்கள் நிச்சயம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
இதற்கிடையே, இந்த குட்டி சுட்டீஸ் பாணியில், மலையாளத்தில், சூர்யா டிவி ஒளிபரப்பி வந்த நிகழ்ச்சி 'குட்டி பட்டாளம்'. இதில் ஒரு வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கு கொண்ட குழந்தையும், தொகுப்பாளினியும் பேசிய விவகாரம் பலரை முகம் சுளிக்க வைத்ததைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சிக்கு, கேரள மாநில குழந்தைகள் நல ஆணையம், கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இதனால் விரைவில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கேயும் எந்த அண்ணாச்சியாவது புகார் கொடுக்கப் போறாவ.. அப்பறம் தெரியும்வே சேதி!