அடிப்படை வசதிகளின்றி தரையில் படுக்கும் நோயாளிகள்.. தென்காசி மருத்துவமனையின் அவலம்
தென்காசி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் தரையில் படுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி: தென்காசி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் தரையில் படுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்காணித்து உடடினயாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லைக்கு அடுத்தப்படியாக மாவட்ட மருத்துவமனை அமைந்துள்ளது தென்காசியில் தான். இங்கு சுமார் 40க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். பல்வேறு சிறப்பு பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது.
தற்போது தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமிகள் மற்றும் பெரியவர்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதிய வசதிகள் இல்லை. இந்த மருத்துவமனையில் சுகாதாரம் மட்டுமின்றி குடிநீர், கழிப்பிடவசதிகள் மோசமாக உள்ளது. ஏற்கனவே இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உடல்நலக்குறைவு காரணமாக இங்கு சிகிச்சைக்கு வரும் நிலையில் இங்கேயே சுகாதாரமில்லாமல் படுப்பதற்கு கட்டில்கள் கூட இல்லாமல் தரையில் படுக்கும் அவலம் இருந்துவருகிறது.
காய்ச்சல் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு இங்கு வருகிற நோயாளிகளுக்கு போதிய இடவசதிகள் இல்லாமல் ஒரே கட்டிலில் இரண்டு நோயாளிகள் படுக்கும் அவலம் இருந்துவருகிறது. மேலும் கொசுக்கடிகளில் இருந்து நோயாளிகளை பாதுகாக்க அரசு கொசுவலைகளை கொள்முதல் செய்து மருத்துவமனைகளில் குவித்துவைத்தாலும் இங்கு திடீர் விசிட்க்கு வரும் முக்கியமான நபர்கள் வரும்போது மட்டுமே நோயாளிகள் தங்கியுள்ள கட்டில் களுக்கு கொசுவலை போடப்படுகிறது.
சுற்றுவட்டாரக்கிராமங்களை சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மருத்துவமனையில் போதிய கண்காணிப்பு இல்லாமல் உள்ளதால் நோய்க்கு சிகிச்சைப்பெற வந்தவர்களே நோயாளிகளாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.