முஸ்லிம்கள், தேமுதிக வாக்குகள் கிடைக்காமல் தோல்வியை தழுவிய திருமாவளவன்
கடலூர்: காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு சுயேட்சை வேட்பாளர் திருமாவளவனால் வெற்றி வாய்ப்பு 87 வாக்குகளில் பறிபோனது...அதேபோல முஸ்லிம்களின் வாக்குகளும் தேமுதிகவினர் வாக்குகளும் கணிசமான அளவுக்கு கிடைக்காமல் போனதும் திருமாவளவனின் தோல்விக்கு காரணமாகும்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுகவின் முருகுமாறன் 48,450 வாக்குகளைப் பெற்றார். திருமாவளவன் 48.363; திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்ன 37,346 வாக்குகளைப் பெற்றிருந்தனர். இது தனித் தொகுதியாக இருந்த போதும் இங்கு போட்டியிட்ட பாமகவின் அன்புசோழன் 25,890 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
அனைத்து வேட்பாளர்களுமே முஸ்லிம்களின் வாக்குகளை அப்படியே அள்ளிவிடலாம் என கணக்குப் போட்டனர். இந்துத்துவா எதிர்ப்பில் தீவிரமாக இருக்கும் திருமாவளவனும் கூட முஸ்லிம் வாக்குகள் தமக்கே கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
லால்பேட்டை டவுன் பஞ்சாயத்து
ஆனால் திமுக கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் நிறைய இருந்ததால் காங்கிரஸ் வேட்பாளருக்கே அதிக அளவில் முஸ்லிம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. லால்பேட்டை டவுன் பஞ்சாயத்தில்தான் முஸ்லிம் வாக்குகள் அதிகம். அங்கு 90% வாக்காளர்கள் முஸ்லிம்கள். இங்கு 6,760 வாக்குகள் பதிவாகின.
காங். வேட்பாளருக்கு அதிகம்
இதில் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்னத்துக்கு 2,926 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதிமுக வேட்பாளர் முருகுமாறனுக்கு 1785; திருமாவளவனுக்கு 1520 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது.
எதிர்பாராத விதமாக...
இது குறித்து முஸ்லிம் வாக்காளர் ஒருவர் கூறுகையில், லால்பேட்டை முஸ்லிம்கள் திமுக கூட்டணிக்கு வேட்பாளருக்கு அதிகம் வாக்களிப்பார்கள்; 2-வது திருமாவளவனுக்கு வாக்களிப்பர் என எதிர்பார்த்தோம்... ஆனால் எதிர்பாராத விதமாக அதிமுகவுக்கும் கணிசமான அளவு வாக்களித்துள்ளனர் என்றார்.
கைவிட்ட தேமுதிக
இதேபோல தேமுதிகவின் வாக்குகளும் திருமாவளவனுக்கு கிடைக்காமல் போனது. உதாரணமாக குமராட்சி ஒன்றியத்தின் தே.மு.தி.க செயலாளர் சீனுசங்கரின் பூத், வடக்கு மாங்குடியில் மொத்தம் இருக்கும் 900 வாக்குகளில் 12 வாக்குகள்தான் திருமாவளவனுக்கு கிடைத்திருக்கிறது. விஜயகாந்த் ரசிகர் மன்றத் தலைவரான மாரியப்பனின் பூத்தான குமராட்சியின் 111, 112-வது பூத்களில் 2,000 வாக்குகள் இருக்கின்றன. ஆனால் 14 வாக்குகள்தான் திருமாவளவனுக்கு கிடைத்தன. அந்த அளவுக்கு தேமுதிகவினர் திருமாவளவனுக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்திருக்கின்றனர்.
சுயேட்சையாகப் போட்டியிட்ட திருமாவளவன் என்பவர் 289 வாக்குகளைப் பெற்றார். அத்துடன் முஸ்லிம் வாக்குகள், தேமுதிக வாக்குகள் திருமாவளவனுக்கு அதிகம் கிடைக்காமல் போனது... ஆகையால்தான் திருமாவளவன் நூலிழையில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.