கொளுத்தும் வெயிலில் மெரீனாவில் தொடரும் புரட்சி : பெண்கள் மயக்கம்- மருத்துவமனையில் அனுமதி
மெரீனா கடற்கரையில் கொளுத்தும் வெயிலில் 5வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் பனியிலும் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மெரீனா புரட்சி உலகத்தையே உலகத்தையே தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த போராட்டம் தொடர்ந்து 4 இரவுகளை கடந்து 5வது நாட்களாக வலுத்துவருகிறது. இங்கு மாணவர்கள் மட்டுமல்லாது சிறுவர்கள், தாய்மார்கள், பெண்கள் உள்ளிட்டோர் இங்கு தங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று வெயில் கொளுத்துவதால் ஏராளமானோர் குடை பிடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 20 பேர் திடீரென மயக்கமடைந்ததாகவும், அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெரீனாவில் 5 நாட்களும் ஏராளமானோர் குவிந்து வருவதால் 3 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 2 டாக்டர்கள் உள்ளனர். எனவே டாக்டர்கள் அதிகம் வேண்டும் என்றும் ஆம்புலன்ஸ்கள் அதிகம் வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே மெரீனா போராட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டாமென இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மெரீனாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் குழந்தைகளை அழைத்து வர வேண்டாமென இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் இந்த போராட்டத்தை பார்க்க வேண்டும் என்றும், எங்களுக்கு தேவையான சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகளை செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.