2வது திருமணம் செய்த போலீஸ்காரர்... கைக்குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்தில் போராடிய பெண்!
தூத்துக்குடி: தன்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த போலீஸ்காரரை கைது செய்ய கோரி பெண் தனது குழந்தையுடன் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் இன்பராஜ். இவரது மனைவி பமீலா. கைக்குழந்தையுடன் இவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டர் அலுவலக வாசலில் கைக்குழந்தையுடன் கதறி அழுதவாறு தர்ணாவில ஈடுபட்டார்.
இன்ஸ்பெக்டர் வனிதாராணி தலைமையிலான போலீசார் அவரை சமாதானப்படுத்தி கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே அழைத்து சென்று மனு கொடுக்க செய்தனர். அந்த மனுவில் அவர், "சூரங்குடி போலீ்ஸ் நிலையத்தில் எனது கணவர் இன்பராஜ் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். இவர் முதல் மனைவி சரண்யாவை விவாகரத்து செய்து விட்டதாக கூறி மோசடியாக என்னை இரண்டாவது திருமணம் செய்தார்.
அவர் மூலம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது என் மீதும், குழந்தை மீதும் இன்பராஜ் சந்தேகப்படுகிறார். இதனால் என்னை தவிர்த்து வருகிறார். இதனால் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன்.
இதனால் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இன்பராஜ் தன்னையும்,. குழந்தையும் நன்றாக பார்த்து கொள்வதாக எழுதி கொடுத்தார். தனியாக வீடு பார்த்து எங்களை தங்க வைத்தார். இருப்பினும் அவர் எங்களை தவிர்த்து வருகிறார்.
இதுகுறித்து டிஐஜியிடம் புகார் தெரிவித்தேன். ஆனால் போலீசார் அவர் மீதும், அவரது தந்தை, முதல் மனைவி மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்பராஜ் மீது வழக்கு பதிவு செயயப்பட்டுள்ள நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்ய காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவள் என்பதால் என்னை உதாசீனப்படுத்தி வருகின்றனர். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தின் காரணமாக கலெக்டர் அலுவலக வாளகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.