தென்காசியில் சேலைக்குள் மறைத்து தங்க வளையல் திருடிய பெண் கைது
தென்காசி
தென்காசி : தென்காசியில் உள்ள நகைக்கடையில் சேலைக்குள் 4 வளையல்களை நைசாக அபேஸ் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.
தென்காசி அம்மன் சன்னதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு பெண்கள் நகை எடுப்பதாக கூறினர். ஆனால் நகை எடுப்பது போல் பாவனை செய்து நகை எதுவும் வாங்காமல் கிளம்பிச்சென்றனர்.
அவர்கள் சென்ற பிறகு கடை பணியாளர்கள் நகைகளை சரிபார்த்தபோது ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 4 வளையல்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடையில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை பார்த்தபோது அந்த பெண்கள் வளையல்களை பார்த்துக் கொண்டிருந்தபோது 4 தங்கவளையல்களை நைசாக சேலைக்குள் மறைத்து எடுத்துச்சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதுகுறித்து தென்காசி போலீஸில் புகார் செய்தனர். புகாரைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். இந்நிலையில் அந்த பெண்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
தொலைக்காட்சிகளிலும், இணையங்களிலும் வெளியானதைத்தொடர்ந்து விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் ஆவாரம்பட்டியைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவரது மனைவி செல்வி (44) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பவுன் மதிப்பிலான நான்கு வளையல்கள் மீட்கப்பட்டன. அவருடன் இருந்த இன்னொரு பெண் மலர் என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.