ஸ்டாலின் மணல் திருடமாட்டார்... கட்சராயன் ஏரியை பார்க்க அனுமதிக்கலாம் - ஹைகோர்ட்
சேலம் கட்சராயன் ஏரியை பார்வையிட எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை: எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் மணலை திருடப்போகிறாரா என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளது. கட்சராயன் ஏரியை அவர் பார்வையிடலாம் என்றம் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள கட்சராயன் ஏரியை பார்வையிட்டு பின்னர் சேலத்தில் நடக்கவிருந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க கடந்த வாரம் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால் ஏரியை பார்வையிடுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.
கடந்த வாரம் சென்னையிலிருந்து கோவை சென்ற ஸ்டாலின், கோவையில் இருந்து சேலம் போகும் வழியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுபற்றி உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் வழக்கறிஞர் கிரிராஜன் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் கே.பழனிசாமி யின் தொகுதியான எடப்பாடியில் கொங்கணாபுரம் அருகே உள்ள கச்சராயன்பாளையம் ஏரியை திமுகவினர் தூர்வாரி சீரமைத்துள்ளனர். அந்த ஏரியில் அதிமுகவினர் முறைகேடாக மணல் அள்ளி வந்தனர்.
இதனால் அந்த ஏரியைப் பார்வையிடுவதற்காக, ஸ்டாலின் கடந்த ஜூலை 27ஆம் தேதி கோவை வழியாக சேலம் செல்ல முற்பட்டார். வழியிலேயே அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி திமுக அறிவித்த மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி மறுக் கப்பட்டதாகவும், அதனால் ஸ்டாலின் சேலத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. உண்மையில், மனிதச் சங்கிலி நடக்க இருந்த இடத் துக்கும், ஸ்டாலின் செல்ல இருந்த கச்சராயன்பாளையம் ஏரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
முதல்வரின் தொகுதிக்கு ஸ்டாலின் செல்லக்கூடாது என்பதற்காகவே உள்நோக்கத்துடன் அவரைத் தடுத்து கைது செய்துள்ளனர். வரும்காலங்களில் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளை திமுக தூர்வார தமிழக அரசு தடை விதிக்கக் கூடாது, இடையூறு செய்யக்கூடாது. ஸ்டாலின் ஏற்கெனவே மத்திய அரசின் உயர் பாதுகாப்பு பிரிவில் இருக்கிறார்.
தூர்வாரும் பணிகளைப் பார்வை யிடச் செல்லும் அவருக்கு தமிழக அரசு அதிகாரிகள், போலீஸார் எவ்வித இடையூறும் செய்யக் கூடாது, தடுக்கக்கூடாது. பேச் சுரிமை, சுதந்திரமாகச் செல்லுதல் போன்றவை அடிப்படை உரிமைகள். அதை தமிழக அரசு தடுக்க முடியாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி, முன்பாக கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், ஸ்டாலின் ஏரிகளை பார்வையிட செல்லும்போது குழுவாக செல்வதால் சட்டம் ஒழுங்கு கெட வாய்ப்பிருக்கிறது என்று தகவல் வந்ததால் கைது செய்தோம் என்று பதிலளிக்கப்பட்டது. திமுக சார்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். 25 பேருடன் ஏரியை ஸ்டாலின் பார்வையிடலாம் என்று நீதிபதி துரைசாமி அனுமதி வழங்கினார்.
ஏரியை ஸ்டாலின் பார்க்கக்கூடாது என்று அரசு சொல்வது சட்ட விரோதம். சட்டம் ஒழுங்கு கெட்டால் அதை பாதுகாக்க போலீசார் இருக்கிறார்கள். ஸ்டாலின் என்ன மணல் திருடவா போகிறார்? அதுதான் உங்கள் கணிப்பா என்று கேட்ட நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்தார்.