நீர் நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது: சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: ஏரி மற்றும் நீர்நிலை பகுதிகள் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக அங்குள்ள ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் டி.கே.சண்முகம் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கொளத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்பை ஒழுங்கு செய்து, பட்டா வழங்க சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
கொளத்தூர் பகுதியில் உள்ள கொரட்டூர் ஏரி நீண்ட நாளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது மகாத்மா காந்தி தெரு, சிவசக்தி தெரு உள்ளிட்ட 4 தெருக்களில் 2,000 குடும்பங்கள் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு தமிழக அரசின் ஆக்ரமிப்புகளை வரைமுறைப்படுத்தும் சட்டத்தின் படி பட்டா வழங்க தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீண்ட நாட்களாக பயண்பாட்டில் இல்லை என்பதற்காக, ஏரி மற்றும் நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், நிலையான வளர்ச்சி என்ற இந்த புதிய காலகட்டத்தில் சுற்றுப்புறசூழலை பாதுகாப்பது மிகப் பெரிய பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. காற்று, நீர், தாவரங்கள், விலங்குகள் என அனைத்து இயற்கை அம்சங்களையும் பாதுகாப்பதற்கு உலகம் முழுவதுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை தந்துள்ள ஆதாரங்களை இழந்துவிட்டால் எதிர்காலத்தில் அதை பெற முடியாது. எனவே அவற்றை பாதுகாப்பது அவசியம் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.