மெரினா கடற்கரை… கிண்டி பூங்கா… குவிந்த பொதுமக்கள்… சென்னையில் களைகட்டிய காணும் பொங்கல்
காணும் பொங்கலுக்கு சென்னை மெரினா கடற்கரை, கிண்டி பூங்காவில் பொதுமக்கள் குவித்துள்ளனர். இதனால் இந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் காணும் பொங்கல் களைகட்டியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையிலும், கிண்டி குழந்தைகள் பூங்காவிலும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியாக காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
பெரும் பொங்கல், மாட்டுப் பொங்கல் ஆகிய இரண்டு பொங்கலையும் கொண்டாடி விட்டு இறுதி பொங்கலான காணும் பொங்கலை வெளியே சென்று மக்களை கண்டு மகிழ்ச்சிப் பொங்க பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னைவாசிகளுக்கு இயற்கை அழகாய் வழங்கியுள்ள மெரினா கடற்கரையில் இன்று லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டுள்ளனர். அதே போன்று கிண்டி குழந்தைகள் பூங்காவிற்கு தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்து காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
கூடி கும்மியடித்த குழந்தைகள்
கிண்டி குழந்தைகள் பூங்காவில் ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்துள்ளனர். இங்கு வைக்கப்பட்டுள்ள யானை உருவங்கள் மற்றும் ஏணிகள் மீது ஏறி குழந்தைகள் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்துள்ளனர். மேலும் சறுக்கு மரத்தில் ஏறி சறுக்கி சறுக்கி சிறுவர், சிறுமியர் விளையாடினர்.
ஊஞ்சலாடி…
பூங்காவில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள ஊஞ்சல்களில் சிறுவர், சிறுமியர் என அனைவரும் ஏறி ஊஞ்சலாடி மகிழ்ந்தனர். இவர்கள் கீழே விழுந்துவிடாமல் இருக்க, பெற்றோர்கள் அவர்களின் அருகிலேயே இருந்தனர்.
பல்வகை பறவைகள்
பூங்காவில் உள்ள மயில், லவ் பேர்ட்ஸ் என பல வகையான பறவைகளை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் காட்டினார்கள். இதுதவிர குரங்குகள், மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை குழந்தைகள் கண்டு களித்தனர்.
மெரினா குவிந்த தலைகள்
லட்சக் கணக்கான மக்கள் இன்று ஒரே நேரத்தில் மெரினா கடற்கரையில் கூடியதால், வெறும் தலைகளாக மட்டுமே மெரினா கடற்கரை காட்சி அளித்தது. அங்கு உள்ள கடைகளில் தங்களுக்கு தேவையானதை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். மேலும், சிப்பி, சங்கு உள்ளிட்ட நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
எம்ஜிஆர் சமாதி
மெரினா கடற்கரையில் கூடிய கூட்டம் அருகில் உள்ள எம்ஜிஆர் சமாதியிலும் நிறைந்திருந்தது. அண்மையில் மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடம் உள்ளதால் அதனைக் காண பெரும்பாலான மக்கள் அங்கு திரண்டு வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
பாதுகாப்பு தீவிரம்
பொங்கல் திருநாளில் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடாமல் இருக்க மெரினாவில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கடலுக்குள் சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கழிகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு மக்கள் கடலுக்குள் செல்ல முடியாத அளவிற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நான்கு சக்கர வாகனத்தில் போலீசார் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.