கிணற்றுக்கு விலை 1.50 கோடி.. ஓபிஎஸ்ஸை எதிர்த்து வாயில் கருப்பு துணி கட்டி கிராம மக்கள் போராட்டம்
ராட்சத கிணற்றை தானமாக தருவதாகக் கூறிவிட்டு தற்போது 1.50 கோடி ரூபாய் கேட்பதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை கண்டித்து மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
பெரியகுளம்: தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் ஓபிஎஸ்ஸைக் கண்டித்து கிராம மக்கள் மீண்டும் போராட்டம் நடத்த அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு மிகப் பெரிய ராட்சத கிணறுகள் 2 உள்ளன. இதனால் ஊராட்சிக்கு குடிநீர் எடுக்கும் கிணற்றில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. ஊராட்சிக்கு குடிநீர் பற்றாக்குறை நிலவியது.
ஒபிஎஸ்ஸுக்கு சொந்தமான கிணற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வலியுறுத்தி லட்சுமிபுரம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, சர்ச்சைக்குரிய கிணற்றை தானமாக வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கிணற்றை ஒப்படைக்கவில்லை
ஆனால் அதற்கான எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. மேலும், கிணற்றை பொதுமக்களிடம் ஒப்படைக்க முடியாத நிலையில் ஓபிஎஸ் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர் போராட்டம்
இந்நிலையில், கடந்த 4 தினங்களாகக் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதம், குத்துவிளக்கேற்றி போராட்டம், வீடுகளில் கறுப்புக் கொடி கட்டிப் போராட்டம், மனிதச் சங்கிலிப் போராட்டம் என வகை வகையாய் நடத்தி வருகின்றனர்.
தற்காலிகமாக ஒத்தி வைப்பு
இதனிடையே, லட்சுமிபுரம் கிராம மக்களுடன், ஓபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில், ஓபிஎஸ் தரப்பு 2 நாட்கள் அவகாசம் கேட்டது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
மீண்டும் போராட்டம்
இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பொதுமக்களுக்குக் கிணற்றை தானமாக தருவதாகக் கூறிவிட்டு தற்போது 1.50 கோடி ரூபாய் கேட்பதால் கிராம மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இதனைக் கண்டித்து நாளை கறுப்புத் துணியை வாயில் கட்டி லட்சுமிபுரத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.