உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் எனக்கூறி நிலம் பதிவு.."அதானி"-க்காக முறைகேடு செய்த தமிழக அதிகாரிகள்
கமுதி : அதானி குழுமத்திற்கு நிலங்களை வழங்குவதற்காக உயிரோடு இருப்பவர்களை இறந்ததாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் தற்போது வெளியாகி அங்கு நிலம் வைத்துள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் ரூ.5 ஆயிரத்து 436 கோடி மதிப்பில் சூரிய சக்தி பூங்கா அமைப்பதற்கு அதானி குழுமம் மின்பகிர்மான கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக கமுதி அருகே நெல், பருத்தி, மிளகாய், மக்காச்சோளம் விளையும் விவசாய நிலங்கள் வளைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
உயிரோடு இருப்பவர்களை, இறந்து விட்டதாக சான்றிதழ் பெற்று, அவர்களது நிலங்கள் தரகர்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளன. கமுதி வட்டத்திற்குட்பட்ட நிலங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களிலுள்ள பத்திரப்பதிவு அலுவகங்களில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
அரசு புறம்போக்கு நிலங்களும், நீர்பிடிப்பு பகுதியில் உள்ள நிலங்களும் அதானி குழுமத்திற்கு வருவாய்த்துறையினர் மூலம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
கமுதி தாலுகாவிற்குட்பட்ட செங்கப்படை, தாதாகுளம், இடையங்குளம் கிராமங்களில் அதானி குழுமத்திற்கு சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக நிலம் வளைக்கப்பட்ட விவகாரத்தில் வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத் துறையினர் கூட்டு சேர்ந்து நடத்திய முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கமுதி வட்டாரத்தில் ஏராளமானோர் தாங்கள் சாகவில்லையென கிராம நிர்வாக அலுவலரிடம் உயிரோடு இருப்பதாக சான்றிதழ் வாங்கி வைத்துள்ளார். இந்த நிலையில், கமுதி தாசில்தார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதன் பின்னணியில் உள்ள வருவாய்த்துறை உயர் அதிகாரிகள், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.