இலங்கையிலிருந்து 66 தமிழக மீனவர்கள் விடுதலை.. பதிலுக்கு 30 இலங்கை மீனவர்களை விடுவித்த தமிழகம்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 66 தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது. இவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விடுதலை செய்யப்படுகின்றனர். இதேபோல தமிழகத்தில் அடைக்கப்பட்டுள்ள 30 மீனவர்களை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 81 மீனவர்கள் அங்குள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். பல்வேறு மீனவர் அமைப்புகளும் இவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வந்தன.
இந்த நிலையில், கடந்த 9-ந்தேதி மீன்பிடிக்க புதுவை மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து சென்ற மீனவர்கள் 29 பேர், நாகப்பட்டினம் மீனவர்கள் 14 பேர் ஆக மொத்தம் 43 மீனவர்களையும், 5 படகுகளையும் இலங்கை கடற்படை பிடித்துச்சென்றிருந்தது. இவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த 43 மீனவர்களும் நேற்று பருத்தித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களில் 28 பேரை விடுதலை செய்யலாம் என்று இலங்கை சட்ட அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதில் குறிப்பிடப்பட்டு இருந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்கள், காரைக்கால் பகுதியில் இருந்து சென்ற 14 மீனவர்கள் என 28 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து 28 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீதமுள்ள 15 காரைக்கால் மீனவர்களுக்கு ஜனவரி மாதம் 5-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இவர்கள் தவிர, இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்டு சிறையில் இருக்கும் 38 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை சட்ட அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக அந்நாட்டின் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இவர்களும் உடனே விடுதலை செய்யப்படுகிறார்கள். எனவே மொத்தம் 66 பேர் விடுதலையாகிறார்கள்.
அதேசமயம், இந்த மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்கவில்லை. மொத்தம் 81 படகுகள் அங்கு சிக்கியுள்ளன.
பதிலுக்கு 30 இலங்கை மீனவர்கள் விடுதலை
இந்த நிலையில் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 30 இலங்கை மீனவர்களை தமிழக அரசு விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
சென்னை துறைமுகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகம் அருகே இந்திய கடல் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். இதனையடுத்து இந்திய கடலோர காவல்படையினர், சென்னை துறைமுகத்தில் 18 இலங்கை மீனவர்களையும், தூத்துக்குடியில் 12 இலங்கை மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கோர்ட்டுகளில் தகவல் தெரிவிக்கப்பட்டு விடுதலை செய்வதற்கான உத்தரவு பெறப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை 30 இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட்டு, புழல் சிறையில் இருந்து 2 வேன்களில் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.