சுஷ்மா பயணத்தை "முன்னிட்டு" தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கைக் கடற்படை!
ராமேஸ்வரம்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கையில் 2 நாள் பயணத்தை முடித்து விட்டுத் திரும்பிய நிலையில், தமிழக மீனவர்களை விரட்டியடித்து தனது விஷமத்தனத்தைக் காட்டியுள்ளது இலங்கைக் கடற்படை.
ஈழத்தில் இறுதிப் போர் முடிந்தது முதலே தமிழக மீனவர்கள் கடும் இன்னலுக்குள்ளாகி வருகிறார்கள், இலங்கைக் கடற்படையிடம் சிக்கி. தொடர்ந்து அடி உதை, துப்பாக்கிச் சூடு, கைது, படகுகள் பறிமுதல் என இலங்கைக் கடற்படையின் அட்டகாசம் தொடர் கதையாகி விட்டது.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை இலங்கை சென்றார். நேற்று தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினார்.
இந்த நிலையில் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் இலங்கைக் கடற்படையினர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற படகை மறித்த இலங்கைக் கடற்படையினர் ரப்பர் குண்டுகளால் தமிழக மீனவர்களைத் தாக்கினர். பின்னர் மீனவர்களின் வலை, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி விரட்டியடித்தனர்.
இலங்கைப் படையினரிடமிருந்து தப்பி இந்திய மீனவர்கள் கரை திரும்பி நடந்ததை மீனவளத்துறையினரிடம் புகாராகக் கூறியுள்ளனர்.