பிறந்த மண்ணில் இன்று மீளாத் துயில் கொள்கிறார் கலாம்.. இறுதிச்சடங்கில் மோடி, தலைவர்கள் பங்கேற்பு
ராமேஸ்வரம் : மறைந்த அப்துல்கலாம் உடல் இஸ்லாமிய முறைப்படி இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் மாரடைப்பால் காலமான அப்துல் கலாம் உடல் டெல்லியில் தலைவர்கள் அஞ்சலிக்குப் பிறகு நேற்று விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் ஆளுநர் ரோசய்யா, கலாம் உடலைப் பெற்றுக் கொண்டார். அவரது உடலுக்கு ஆளுநர் ரோசய்யா, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் கொண்டு செல்லப்பட்ட பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனத்தில் கலாம் உடல் ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டது.
வழி நெடுகிலும் சாலையில் இரு புறங்களிலும் பொதுமக்கள் குவிந்திருந்து கலாம் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
ராமேசுவரத்தில் பேருந்து நிலையம் அருகே மைதானத்தில் கலாமின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இரவு 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ராமேசுவரத்தில், அவரது உடலுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், மனோகர் பரிக்கர், பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் வடிவேலு, விவேக் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியதால், இரவு 8 மணியைக் கடந்த பின்னர் கலாம் உடலை அவரது சகோதரர் குடும்பத்தாரிடம் ராணுவத்தினர் ஒப்படைத்தனர்.
தற்போது கலாம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலை இன்று காலை மீண்டும் பெற்றுக் கொள்ளும் ராணுவத்தினர், பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்திய பின்னர், அரசு ஒதுக்கிய இடத்திற்கு காலை 11 மணிக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று வருகிறார். இதனை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு உறுதி செய்தார்.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ஆந்திரா உட்பட 6 மாநிலங்களின் முதல்வர்கள், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
இதனால் ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.