ஆம்னி பேருந்து… கடந்த ஆண்டு கட்டணமே தொடர ஐகோர்ட் மதுரை உத்தரவு
சென்னை: தீபாவளி பண்டிகையின் போது, கடந்த ஆண்டு வசூலித்த ஆம்னி பேருந்துக்கான கட்டணமே இந்த ஆண்டும் தொடர வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கான ஆம்னி பேருந்து கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் சில நாட்களுக்கு முன்னர் தாமாகவே உயர்த்தி அறிவித்தது. இது தொடர்பான செய்தி வெளியானதை அடுத்து ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன் வந்து ஷு மோட்டோவாக இந்த வழக்கை விசாரித்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அரசு ஏன் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியது. மேலும், இதுகுறித்து அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த ஆண்டு தீபாவளியின் போது வசூலிக்கப்பட்ட ஆம்னி பேருந்து கட்டணங்களே இந்த ஆண்டும் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும், ஆம்னி பேருந்துகளின் அதிகம் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அவ்வாறு கண்காணிக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், அரசு தலையீட்டு ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயம் செய்யவும் ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் 4-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.