ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சட்டக்கல்லூரி மாணவர்கள் நுழைவு வாயிற் போராட்டம்
நெடுவாசலில் செயல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் நுழைவு வாயிற் போராட்டத்தை இன்று நடத்தினர்.
சென்னை: புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு செயல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று நுழைவு வாயிற் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள் 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெறக் கோரியும் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் நுழைவு வாயிற் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் போலீசார் வாயில் அருகே பாதுகாப்பிற்கு போடப்பட்டிருந்தனர்.
முன்னதாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை வள்ளுவர் கோட்டம் அருகில் சென்னையின் பல்வேறு கல்லூரிகளைச் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது, மாணவர்களை அடித்து உதைத்து போலீசார் இழுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.