நாள்தோறும் கொலை, கொள்ளை நடக்கும் தமிழகம் அமைதிப் பூங்காவா? கேட்கிறார் மு.க.ஸ்டாலின்
திருச்சி: சட்டம், ஒழுங்கு பிரச்னையில் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்று பினாமி முதல்வர் கூறுகிறார். நாள் தோறும் கொலை கொள்ளை நடந்தால் அமைதி பூங்காவா? என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்றிரவு ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது அந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு கடந்த தேர்தலை விட 600 வாக்குகள் அதிகமாக 55,045 வாக்குகள் கிடைத்தது. இதில் இருந்து மாற்றம் துவங்குகிறது என்பது தெரிகிறது. திமுக வாங்கிய வாக்குகள் மற்ற கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளன. தமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் முன்னோட்டமாக ஸ்ரீரங்கத்தில் திமுக வாக்குகளை பெற்றுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக பூஜ்யம் வாங்கியதாக கூறுகின்றனர். 1996, 2004 தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் வென்றது? பூஜ்யம் தானே. ஸ்ரீரங்கத்தில் அதிமுக வெற்றி பெற பணம் தான் பிரதானம். ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை பட்டுவாடா ஆகியுள்ளது. ஒட்டுமொத்தமாக தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரையும் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இது மிகவும் தவறு என நான் வாதிட்டேன். இதையடுத்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ‘அவர்களது தண்டனையை குறைத்து, கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கிறோம்‘ என்றார். மறுநாள் பத்திரிகைகளில் ‘ஸ்டாலின் கேட்டதால் தேமுதிக எம்எல்ஏ சஸ்பெண்ட் ரத்து‘ என செய்தி வெளிவந்ததை பார்த்து போயஸ்கார்டனில் ஜெயலலிதா கொதித்துவிட்டார். பிறகு மீண்டும் அனைவரும் சஸ்பெண்ட் என்று கூறினர். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்‘ என கேட்டபோது, ‘நாங்கள் சஸ்பெண்ட் ரத்து என கூறவில்லையே‘ என்று நழுவினர்.
ஓபி பினாமி. மருத்துவமனைக்குச் சென்றால் அவுட்பேஷன்ட் என்று இருக்கும். அவர் உள்நோயாளி(இன்பேஷன்ட்) கூட இல்லை. புறநோயாளி தான். ஒரு முதல்வருக்கு அறையோ, இருக்கையோ கூட இல்லை.
பினாமி முதல்வர் ஓபி, அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழு முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறுகிறார். அப்படி கூறுவதற்கு தகுதி இருக்கிறதா? அதிமுக ஆட்சிக்கு வந்தால் உதவிக்குழுக்களுக்கு ரூ.10 லட்சம் கடன் அளித்து, 25 சதவீதம் மானியம் வழங்கப்படும் என உறுதி மொழி கொடுத்தார். அவர் கூறியபடி எந்த ஒரு மகளிர் குழுவுக்காவது கடன் வழங்கப்பட்டுள்ளதா.
ஜெயலலிதா 3 ஆண்டு ஆட்சியில் 110 விதியின் கீழ் ஏராளமான திட்டங்களை அறிவித்தார். இதில் திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கான எந்த ஒரு முயற்சியும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. திருச்சியில் ரூ.100 கோடி மதிப்பில் சிங்கப்பூர் போன்று தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றார். அதுவும் நடக்கவில்லை.
சட்டம், ஒழுங்கு பிரச்னையில் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்று பினாமி முதல்வர் கூறுகிறார். நாள் தோறும் கொலை கொள்ளை நடந்தால் அமைதி பூங்காவா? திமுக ஆட்சியில் ஆதாய கொலைகள் 21.4 சதவீதம் அதிகரித்ததாகவும், அதிமுக ஆட்சியில் 4.3சதவீதம் குறைவு என்று ஓபி சொல்கிறார்.
தமிழக போலீஸ் துறை அறிக்கையில் சொன்னப்படி 2011ல் அதிமுக ஆட்சியில் 1074, 2012ல் 1,812, 2013ல் 1,815, 2014ல் 1679 ஆதாய கொலைகள் நடந்துள்ளது. அக்கிரம, அநியாய ஆட்சி இங்கு நடக்கிறது. அந்த அக்கிரம அநியாய ஆட்சிக்கு முடிவுக்கட்டும் எச்சரிக்கை மணியாகத் தான் இந்த தேர்தல் அமைந்துள்ளது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.