தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?- கருணாநிதி
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த கொலை, கொள்ளை முதலான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அன்றாடம் காவல் துறையை பற்றியும், கொலை, கொள்ளைகளை பற்றியும் ஏடுகளில் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதைப்பற்றி ஆட்சிப் பொறுப்பிலே இருப்பவர்கள் யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.
எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் செய்வது, பேசினாலும் அவதூறு வழக்கு தொடுப்பது, மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பது, மாவட்டங்களுக்குள் வரவே கூடாது என்று ஆணை பிறப்பிப்பது, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது என்று ஆட்சியினர் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் செயல்பட்டு வருகிறார்கள்.
அத்தகைய ஜனநாயகத்துக்கு விரோதமான காரியங்களில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவதால், அவர்களுடைய பெரும்பாலான நேரம் அதிலேயே கழிந்து, அடிப்படை பணிகளான சட்டம் - ஒழுங்கு, கொலை, கொள்ளை சம்பவங்களில் புலனாய்வு போன்றவை புறக்கணிக்கப்பட்டு, தமிழக மக்கள் அச்சத்தின் கோரப்பிடியில் அனுதினமும் தவிக்கிறார்கள்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.