ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து பேனர் வைத்த வழக்கறிஞருக்கு 7 நாள் ஜெயில்!
கடலூர்: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து பேனர் வைத்த வழக்கில், வழக்கறிஞர் ஒருவருக்கு 7 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிகோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி.குன்கா ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து அ.தி.மு.கவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். திட்டக்குடியில் அ.தி.மு.க வக்கீல் தங்க கொளஞ்சிநாதன் என்பவர் கோர்ட் முன்பு பேனர் ஒன்று வைத்தார். அதில் நீதி தோற்றது, அநீதி வென்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் ராஜா திட்டக்குடி கோர்ட்டில் புகார் செய்தார். இதையடுத்து வக்கீல் தங்க கொளஞ்சிநாதன் மீது நீதிபதியை விமர்சித்ததாகவும், அனுமதியின்றி பேனர் வைத்ததாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதன் விசாரணை மாவட்ட குற்றவியல் நீதிபதி உத்தம ராஜா முன்பு நடந்து வந்தது. அவர் வக்கீல் தங்க கொளஞ்சி நாதனுக்கு 2 வழக்கிலும் தலா 7 நாட்கள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கும்படியும் உத்தரவிட்டார். இதையடுத்து வக்கீல் தங்ககொளஞ்சிநாதன் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.