திருச்சி கோர்ட்டில் வக்கீல்கள் அராஜகம்.. போலீஸ் டிரைவரை சரமாரியாக பெல்ட், செருப்பால் தாக்கிய கொடூரம்
திருச்சி: திருச்சி கோர்ட் வளாகத்தில் போலீஸ் வாகன டிரைவரை சரமாரியாக செருப்பு, பெல்ட், கட்டையால் அடித்து வெளுத்தனர் வக்கீல்கள். இதனால் கோர்ட் வளாகமே போர்க்களம் போல மாறியது. போலீஸார் கடும் சிரமப்பட்டு அந்த டிரைவரை மீட்டுக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த பிரபல ரவுடி குணா, தொழில் அதிபர் ஆறுமுகம் என்பவரை பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ரவுடி குணாவுக்கு உடந்தையாக இருந்ததாக வக்கீல் ராஜேந்திரகுமார் என்பவர் மீதும் கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வக்கீல் ராஜேந்திரகுமார் மீது போலீசார் வழக்கு போட்டதை கண்டித்து வக்கீல் சங்க தீர்மானத்தின் அடிப்படையில் திருச்சி நீதிமன்றத்தின் பிரதான நுழைவு வாயில் அருகே வக்கீல்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரதம் இருந்த பகுதி வழியாக உதவி போலீஸ் கமிஷனர் கணேசன் தனது ஜீப்பில் வந்துள்ளார். அந்த ஜீப்பை போலீஸ் இளைஞர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த திலக் என்பவர் ஓட்டி வந்தார். அந்த வாகனத்தை வக்கீல்கள் மறித்து நிறுத்தினர். இந்த வழியாக வாகனம் போகக் கூடாது என்றும் தடுத்தனர். இதனால் உதவி கமிஷனர் வாகனத்தை விட்டு இறங்கினார். வாகனம் போக முடியாமல் வக்கீல்கள் வழிமறித்து நின்றதால், திலக் ஹார்ன் அடித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த வக்கீல்கள் திலக்கை பிடித்து இழுத்து சரமாரியாக அடிக்கத் தொடங்கினர். கையில் கிடைத்ததை எல்லாம் வைத்து அடித்துள்ளனர். பெல்ட், கட்டை, செருப்பு ஆகியவற்றால் அவரை அடித்தனர். இதைத் தொடர்ந்து உதவி கமிஷனர் கணேசன், போலீஸார் ஓடி வந்து திலக்கை கடுமையாக போராடி மீட்டு அங்கிருந்து கொண்டு சென்றனர்.
திலக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காரணமாக கோர்ட் வளாகமே போர்க்களம் போல மாறிக் காணப்பட்டது. வக்கீல்களின் செயலைப் பார்த்து போலீஸார் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பொதுமக்களும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.