வெயில் அதிகரிப்பால் விலை உயர்ந்த எலுமிச்சை – விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை: சுட்டெரிக்கும் வெயில் காரணமாக எலுமிச்சை பழங்களின் விலைகடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் எலுமிச்சை விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் எலுமிச்சை உற்பத்தி மற்றும் விற்பனையில் புளியங்குடி முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக புளியங்குடி, டிஎன் புதுக்குடி, பகுதியில் எலுமிச்சை மார்க்கெட்டுகள் உள்ளன.
இங்கு சுமார் 29 கடைகளில் விவசாயிகள் கொண்டு வரும் எலுமிச்சை பழங்கள் ஏலம் மூலம் ஆயிரம் பழங்களுக்கு இவ்வளவு என விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சாதாரண காலங்களில் ஆயிரம் பழங்கள் வெறும் ரூபாய் 500க்கு கூட விலை போகாது. ஏப்ரல், மே ஆகிய கோடை காலங்களில் 1000 பழங்கள் ரூபாய் 5 ஆயிரத்திற்கு மேல் விற்பனை ஆகின்றன.
மற்ற மாதங்களில் எலுமிச்சையில் சாகுபடியில் ஏற்படும் இழப்பை இந்த மாதத்தில் சரி செய்து விடுவர் விவசாயிகள். கடந்த நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் கோடை மழை பெய்த போது 1000 பழங்கள் ரூ.2500 முதல் ரூ.3500 வரை மட்டுமே விலை போனது.
இதனால் விவசாயிகள் கவலையில் உறைந்தனர். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் எலுமிச்சை விலையும் உயர தொடங்கியுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் 1000 பழங்கள் ரூ.4500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும், பச்சை எலுமிச்சை காய்கள் ரூ.1500 முதல் ரூ.3500 வரையிலும் மார்க்கெட்டில் ஏலம் போயின.
இதனால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் ஆயிரம் பழங்கள் விலை ரூ.5 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில்லரை மார்க்கெட்டில் ஒரு பழம் ரூ.6 முதல் ரூ.7 வரை விற்கப்படும் என தெரிகிறது.