நாயைக் கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி – பீதியில் உறைந்த செங்கல்பட்டு!
சென்னை: செங்கல்பட்டு அருகே பட்டரைவாக்கத்தில் உள்ள பண்ணையில் கட்டிப் போட்டிருந்த நாயை சிறுத்தைப் புலி கடித்துக் குதறியது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.
செங்கல்பட்டு, வண்டலூர் வனக் காப்புக் காடு எல்லைக்குள்பட்ட காடுகளையொட்டிய கிராமங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலை அடுத்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு சிறுத்தைப் புலி நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
இதனையடுத்து அந்தப் பகுதிகளில் சிறுத்தைப் புலியைப் பிடிக்க கூண்டுகளையும், கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தி சிறுத்தைப் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
சிறுத்தைப் புலி நடமாட்டம்:
இதற்கிடையில் செங்கல்பட்டை அடுத்த அஞ்சூர் காப்புக் காட்டையொட்டிய பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தைப் புலியின் நடமாட்டம் பதிவாகியது.
தேடும் பணியில் மும்முரம்:
அதனை ஆய்வு செய்த வனத்துறையினர் அந்தப் பகுதியில் வனத்துறையினர் கூண்டுகளையும், கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தி சிறுத்தைப் புலியை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
கூண்டுகள் அமைப்பு:
இதற்கிடையில் வண்டலூரை அடுத்த ஆதனூர் ஏரியில் சிறுத்தைப் புலி நடமாட்டத்தை கிராம மக்கள் நேரில் பார்த்ததையடுத்து வனத்துறையினர் அந்தப் பகுதியில் செயற்கை நீர்த் தொட்டியை வைத்து அதனருகில் கூண்டுகளை அமைத்தனர்.
சிக்காத சிறுத்தைப்புலி:
ஆனால் சிறுத்தைப் புலி கூண்டுக்குள் சிக்காமல் இருந்தது. இதற்கிடையில் வண்டலூரை அடுத்த சதானந்தபுரம், காரணைப் புதுச்சேரி பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு சிறுத்தைப் புலி வந்து போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஓட்டம் பிடித்த அதிகாரிகள்:
அதனையடுத்து கடந்த மாதம் செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் பகுதியில் சிறுத்தைப் புலியைப் பிடிக்க வைத்திருக்கும் கூண்டுகளை வனத்துறை ஆய்வு செய்தபோது சிறுத்தைப் புலியின் கர்ஜனை சப்தத்தைக் கேட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களுடன் காட்சிகளைப் பதிவு செய்யச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளரும் ஓட்டம் பிடித்தார்.
அச்சம் குறைவு:
இதற்கிடையில் சிறுத்தைப் புலியின் நடமாட்டம் இல்லாததால் பொதுமக்களிடம் இருந்து வந்த அச்சம் குறைந்திருந்தது.
நாயைக் கடித்த சிறுத்தைப்புலி:
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு செங்கல்பட்டை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை சிறுத்தைப் புலி கடித்துக் குதறியது.
கால் தடங்கள் ஆய்வு:
தகவல் அறிந்த வனத்துறை அதிகாரி உள்ளிட்டோர் இந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு நாயின் உடலை ஆய்வுக்கு அனுப்பி வைத்ததுடன் அங்குள்ள கால் தடங்களையும் எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். மீண்டும் சிறுத்தைப் புலியின் நடமாட்டம் கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.