ஊருக்குள் ஆடுகளை அடித்து தின்னும் சிறுத்தை… பிதியில் மக்கள்.. பிடிக்க முடியாமல் திணறும் வனத்துறை
ஊருக்குள் வந்து ஆடுகளை அடித்து தின்னும் சிறுத்தையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருநெல்வேலி: நெல்லை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திரியும் சிறுத்தை பிடிபடாமல் போக்கு காட்டி வருவதால் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
கடையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெத்தன்பிள்ளை குடியிருப்பு உள்ளது. இந்த கிராமத்திற்குள் அடிக்கடி சிறுத்தை புகுந்து வளர்ப்பு விலங்குகளை கொன்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். வனத்துறையினரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு போய் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த சிறுத்தை நாகேந்திரன் என்பவரது ஆட்டை அடித்துக் கொன்று காட்டுக்குள் இழுத்துப் போட்டுவிட்டு சென்றது. மேலும் அதே பகுதியில் இருந்த மற்றொரு ஆட்டையும் அடித்து கொன்றது. இதனால் வனப்பகுதிக்கும் ஊருக்கும் நடுவில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த நிலையிலும், செல்வி என்பவரது வீட்டில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த ஆட்டை தூக்கி செல்ல முயன்றது. ஆனால் அங்கிருந்தவர்கள் வீட்டின் முன்பு தீமூட்டி சிறுத்தையை விரட்டினர். மேலும் இளைஞர்களும், பொதுமக்களும் இரவு முழுவதும் சிறுத்தை ஊருக்குள் வராதபடி தீப்பந்தம் ஏந்தியபடி காவல் இருந்து வருகின்றனர்.
இதனிடையே, செல்வி வீட்டின் அருகே சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கூண்டு அவர் வீட்டுக்கு மாற்றப்பட்டது. அங்கு வனத்துறையினர் இரவில் தீப்பந்தம் ஏந்தியும், வெடி வெடித்தும் சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் சிறுத்தை சிக்கவில்லை. இதனால் அவர்கள் திணறி வருகின்றனர்.