புளியரை எல்லையில் நடமாடும் சிறுத்தை.. கூண்டில் வைத்த நாய் மாயமானதால் மக்கள் பீதி!
நெல்லை: நெல்லை மாவட்டம் புளியரை அருகே தமிழக எல்லை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளதால் விவசாயிகள் பீதியில் உறைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் புளியரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை மலையடிவார தோட்டத்தில் புகுந்து ஆடு, நாய்களை இழுத்துச் செல்வதாஅக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் வனத்துறை சார்பில் புளியரை உட்கோணம் பகுதியில் விவசாயி ஒருவரது தோட்டத்தில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைக்ப்பட்டிருந்தது. கூண்டுகளில் இரையாக நாய் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காலை கூண்டுக்குள் இருந்த நாய் காணாமல் போனதை பார்த்த விவசாயிகள் பீதி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்து விட்டு கூண்டுக்குள் சிக்காமல் நாயை சிறுத்தை இழுத்து சென்றிருக்கலாம் என தெரிவித்தனர். அதனால் மலையடிவார பகுதி மக்களும் தோட்ட விவசாயிகளும் கடும் அச்சத்தில் உள்ளனர். இன்னும் கூண்டுகள் வைத்து சிறுத்தையை விரைவாக பிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகி்ன்றனர்.