கோவை அருகே சிறுத்தை புலி நடமாட்டம் : விடிய விடிய உருட்டு கட்டைகளுடன் ரோந்து சுற்றிய மக்கள்
கோவை: கோவை அருகே உள்ள குனியமுத்தூரில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
கோவையில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது குனியமுத்தூர் நகராட்சி. இங்குள்ள ஒரு வீட்டின் அருகே நேற்றிரவு சிறுத்தை ஒன்று நடமாடுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து குனியமுத்தூர் வந்த வனத்துறையினர் சிறுத்தையை தேடி பார்த்தனர். ஆனால் வனத்துறையினர் வருவதற்குள் சிறுத்தை மாயமாகிவிட்டது.
இதனால் குனியமுத்தூர் பகுதி மக்கள் பீதியடைந்ததுடன், நேற்றிரவு தூக்கத்தையும் இழந்தனர். இரவு முழுவதும் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் உருட்டுக்கட்டைகளுடன் ஊரைச் சுற்றி ரோந்து வந்தனர்.
ஊருக்குள் சுற்றி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குனியமுத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தைப் பீதி காரணமாக குனியமுத்தூரில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.