தாத்தா பாட்டிகளுக்கும், மாமா சித்தப்பாக்களுக்கும்.. ஒரு கடிதம்!
திருவண்ணாமலை: அக்டோபர் 9ம் தேதி உலக அஞ்சல் தினம். இதையொட்டி திருவண்ணாமலை மரபு சார் அமைப்பின் மூலம் கடிதம் எழுதும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
வருடந்தோறும் அக்டோபர் 9 உலக அஞ்சல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் அஞ்சல் துறை ஆற்றிய சேவை என்பது நிச்சயம் இந்த தலைமுறைக்கு தெரிய அதிகம் வாய்ப்பில்லை. உலகில் உள்ள நாடுகளிலே இந்தியா தான் அதிக "அஞ்சல் நிலையங்களை" கொண்ட நாடு என்ற பெருமை, கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கிவிட்டது.
இன்றைய தலைமுறைக்கு அஞ்சல் எழுதுவதே முற்றிலும் புதிய அனுபவமாக தான் இருக்கும். எனவே "திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின்" மூலம் ஒரு முயற்சி முன்னெடுப்பு செய்யப்பட்டது. ஆம் நமது உணர்வு கலந்த கடிதம் எழுதும் அனுபவத்தை இந்த தலைமுறையும் அனுபவித்திட இந்த தினத்தை ஒரு வாய்ப்பாக கருதி கடிதம் எழுதி அன்பானவர்களிடம் பகிர்ந்துகொள்ள முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது.
அதை விட மிக முக்கிய நோக்கமாக, கடித போக்குவரத்தில் வாழ்ந்த நமது தாத்தா /பாட்டி தலைமுறை இன்று கடிதங்களை தீண்டமுடியாமல் போன ஏக்கத்தையும், தனது பேரன் /பேத்திகள் அன்பு சொல்லையும் இந்த அஞ்சல் தினம் மூலம் ஒரு கடிதம் எழுதி அவர்களை இன்பத்தில் ஆழ்த்துவோம் என்ற முயற்சியை முகநூல் பதிவின் மூலம் முன்னெடுத்தோம்.
நம்மை வளர்த்து ஆளாக்கிய தலைமுறைக்கு, நாம் எழுதும் ஒரு கடிதமே அவர்களுக்கு அளவில்லா சந்தோசத்தை தருவிக்கும் என்பதால் முகநூலின் மூலம் நண்பர்கள் பலரை அவர்களின் தாத்தா /பாட்டிக்கு கடிதம் எழுத தூண்டினோம். ஆம் அனைவரின் உறவுகளுக்கும் (தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, நண்பர், காதலன் /காதலி) ஒரு கடிதம் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டோம் .
உங்கள் வீட்டில் உள்ள சிறு பிள்ளைகளை, தாத்தா /பாட்டிக்கு எழுத வையுங்கள், தாங்களும் உங்களின் நெருக்கமான நண்பர்கள், ஆசிரியர்கள், படித்த பள்ளி / கல்லூரி, உறவினர்கள் என்று விருப்பட்ட அனைவர்க்கும் மனம் திறந்து எழுதுங்கள். எதாவது ஒரு உறவிடம் பேசாமல் இருந்தால் அவர்களுக்கு முதலில் ஒரு கடிதம் எழுதி அதன் மூலம் உங்கள் உறவை புதுப்பித்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க கிட்டத்தட்ட 500 கடிதங்களுக்கு மேல் பரிமாறி கொள்ளப்பட்டது என்பதே எங்கள் அமைப்பிற்கு மிக பெரிய மகிழ்ச்சி.
மிக முக்கியமாக அனைவரையும் தமிழில் எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டோம். நமது மொழி வளம் சிறக்க எழுத்து நடையில் இருந்தால் தான் சிதைவில் இருந்து மொழியை காப்பாற்ற முடியும் என்பதால் அனைவரையும் தாய் மொழியில் கடிதம் எழுத தூண்டபட்டது.
மேலும், இது போன்று அழிந்து வரும் பல மரபு விஷயங்களை மீட்டு எடுக்க அனைவரின் உதவியும் கைகோர்ப்பும் மிக அவசியம் என்பதால் சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் அனைவரும் திருவண்ணாமலை மரபுசார் அமைப்பிற்கு தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எழுதி அனுப்பும் படி கேட்டு கொண்டதற்கிணங்க பலரும் ஆர்வமுடன் எழுதி வருகின்றனர்.
மேலும் பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை இருந்த காரணத்தால் இந்த தினத்தை நாங்கள் ஒரு வார கொண்டாட்டமாக முன் எடுத்தோம். திருவண்ணாமலை விக்டோரியா நடுநிலை பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கல்லேரி ஆகிய இரு பள்ளி மாணவர்கள் இந்த கடிதம் எழுதும் நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் தாத்தா /பாட்டிகளுக்கு ஆர்வமுடன் கடிதம் எழுதினார்.
இந்த முயற்சிக்கு விதையான அமைப்பின் அறிவுறுத்தல் குழு உறுப்பினர் செல்வி ப்ரீத்தி மற்றும் இதர ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ் பன்னீர்செல்வம், நீலகண்டன், ஜெகநாதன் இந்த நிகழ்வை சிறப்பாக செய்து முடித்தனர். கிட்டத்தட்ட கடிதத்தை புதிதாக மாணவர்கள் பார்ப்பதால் இந்த கடிதம் எழுதும் பழக்கத்தை மாவட்டத்தின் மற்ற பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விதைத்திட மாத மாதம் ஒரு பள்ளி என்று முயற்சி எடுக்க உள்ளோம் என்று அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.