புழல் சிறை ஆயுள் தண்டனை கைதிக்குத் திருமணம்.. பரோலில் நாகூருக்கு வந்து மணந்தார்!
நாகப்பட்டினம்: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிக்கு நேற்று நாகூரில் திருமணம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் நாகூர் யூசூப் நைனா தெருவை சேர்ந்த அப்துல்லா என்பவருடைய மகன் முகைதீன் அப்துல்காதர் என்ற உமர்பாரூக் (35). டிப்ளமோ படித்துள்ள உமர், ரயில்வேயில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 1999-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி திருச்சி உறையூர் அண்ணாமலை நகரை சேர்ந்த டாக்டர் ஸ்ரீதர் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட உமருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.
இதைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார் உமர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் உமருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து உமருக்கு ஏற்ற மணமகளைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். பின்னர், நாகூரைச் சேர்ந்த ஜாகிரா பானு என்ற பெண்ணை உமருக்கு மணமுடித்து வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
எனவே, திருமணத்திற்காக உமரை 2 மாதம் பரோலில் விடுவிக்க வேண்டும் என அவரது தந்தை சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியம், உமருக்கு நவம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை 10 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், இந்த விடுப்பின் போது உமருக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், திருமணம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் வைபவங்களின் போது, அவரை போலீசார் எந்த தொந்தரவும் செய்யக் கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று, சிறையில் இருந்து வெளியே வந்த உமர் தனது சொந்த ஊரான நாகூருக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து உறவினர்கள் முன்னிலையில், நேற்று அவருக்கும் ஜாகிரா பானுவுக்கும் நாகூரில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தின் போது ஏராளமான உளவு பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.