சென்னையில் சட்டென்று மாறிய வானிலை.. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் பிற்பகல் நேரத்தில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.
சென்னை: சென்னையில் காலைமுதலே வெயிலடித்த நிலையில் பிற்பகலில் சட்டென்று வானிலை மாறியது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வளிமண்டல கீழடுக்கில் காற்று சுழற்சி நீடிப்பதால் வடதமிழகம் முதல் தென்தமிழகம் வரை அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. தென் மாநிலங்களில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்கிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
வானிலையின் கணிப்பு பொய்யாகவில்லை. பிற்பகல் நேரத்தில் திடீர் என மெரீனா கடற்கரை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூரில் மழை பெய்தது. சாரல் மழையாக தொடங்கி கனமழையாக கொட்டித்தீர்த்தது. முகப்பேர், பட்டினப்பாக்கம், மந்தைவெளியிலும் கனமழை பெய்தததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
காலை முதலே வெயிலடித்த நிலையில் பிற்பகலில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. திடீர் குளிர் காற்று வீசியது திடீரென மழை கொட்டித் தீர்த்தது.
மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், முகப்பேர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.