மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் “லிங்கா” விவகாரம்... ரஜினியின் புதிய படத்திற்கு சிக்கல்…
சென்னை: ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தை வெளியிட்டு கையை சுட்டுக்கொண்ட விநியோகஸ்தர்கள் தங்களுக்கு சொன்னபடி இழப்பீடு வழங்கவில்லை என்று கூறி மீண்டும் போராட்டக் களத்தில் குதிக்க உள்ளனர். இதனால் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘லிங்கா' படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ம் தேதி வெளியானது. மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் ரசிகர்களை கவராமல், வசூலிலும் ஏமாற்றத்தையே தந்தது.
இதனால் இப்படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களும் கையை சுட்டுக்கொண்டனர். ரூ.33 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் அந்த தொகையை தர வேண்டும் என்றும் வலியுறுத்தி விநியோகஸ்தர்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம் மேற்கொண்ட அவர்கள்,. ரஜினி வீட்டுக்கு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, ரஜினி இப்பிரச்னையில் நேரடியாக தலையிட்டார். அவரது சார்பில் விநியோகஸ்தர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. தயாரிப்பாளர் சங்கமும் இதில் பங்கேற்றது. பேச்சு வார்த்தை முடிவில் பனிரண்டரை கோடி ரூபாய் நஷ்ட ஈடாக விநியோகஸ்தர்களுக்கு அளிக்க முடிவானது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இந்த தொகை வழங்கப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டது.
ஆனால் ரூ.5 கோடி தான் தரப்பட்டது என்றும், மீதி தொகையை இன்னும் தரவில்லை என்றும் வினியோகஸ்தர்கள் குற்றம் சாட்டினர். மேலும் தங்களுக்கு ரஜினி ஒரு படத்தில் நடித்து தருவார் என உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ரஜினிக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த போராட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ள நிலையில் லிங்கா திரைப்பட நஷ்டம் குறித்த வினியோகஸ்தர்களின் போராட்ட அறிவிப்பு திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.