மீண்டும் ஒரு "ஆடி கார்" ஐஸ்வர்யா வேண்டாம்... குடிகாரர்களுக்கு கை கொடுக்க வரும் மது குடிப்போர் சங்கம்
சென்னை: மது குடித்து விட்டு கார் ஓட்டுபவர்களால் சாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்கும் நல்லெண்ணெத்தில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் புதிய "திட்டம்" ஒன்றை தீபாவளி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஆடி கார் ஐஸ்வர்யா, போர்ஷே கார் விகாஷ் போன்றோர் மது போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் பரிதாபமாக இரண்டு பேர் உயிரிழந்தனர். இதேபோல், பார்ட்டியில் குடித்து விட்டு நடிகர் அருண் விஜயும் விபத்தில் சிக்கினார்.
இப்படியாக மற்றவர்களின் போதைக்கு அப்பாவி மக்கள் உயிர் இழப்பது சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதிகரித்து வருகிறது. இந்தச் செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டதோடு சரி. ஆனால், அதனைத் தடுப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
தண்ணி காட்டும் ‘குடி’மகன்கள்...
சாலைகளில் ஆங்காங்கே குடித்து விட்டு வண்டி ஓட்டுகிறார்களா என்பதை போலீசார் சோதனை செய்கின்றனர். ஆனால், அவர்களின் கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு, ‘குடி'மகன்கள் விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.
அதிரடி திட்டம்...
எனவே, வரும் காலத்தில் இது போன்ற விபத்துக்களைத் தடுக்க தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளது. அதன் முதல்கட்டமாக சமூகநலன் கருதி வரும் தீபாவளி முதல் புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்த இருக்கின்றனராம்.
இலவச டிரைவர்கள்...
அதாவது, குடித்து விட்டு போதை அதிகமாகி வண்டி ஓட்டுவது சிரமம் எனக் கருதுபவர்கள், இந்த சங்கத்தில் முன்பதிவு செய்து விட்டால் போதும். சங்கத்தின் மூலம் அனுப்பப்படும் ஆக்டிங் டிரைவர்கள், சம்பந்தப்பட்ட ‘குடி'மகனை பத்திரமாக காரில் அழைத்துக் கொண்டுபோய் வீட்டில் இறக்கி விட்டு விடுவர்.
சமூக சேவை...
இந்தத் திட்டம் குறித்து மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் பி.செல்லபாண்டியன் "ஒன் இந்தியா தமிழ்" இணையத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியதாவது:-
சமூகசேவையாக மட்டுமே இந்த திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. முதல்கட்டமாக சென்னையில் தீபாவளி முதல் இந்தத் திட்டத்தை அமல் படுத்த இருக்கிறோம். எங்களது சங்க விபத்துத் தடுப்புப் பிரிவு அமைப்பாளர் செந்தில், மாருதி கால் டிரைவர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
முன்பதிவு கட்டாயம்...
செந்தில் மற்றும் அவரது நண்பர்களின் நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர்களைக் கொண்டு இந்தத் திட்டத்தை நாங்கள் அமல் படுத்த இருக்கிறோம். மது குடிக்கச் செல்வோர் முன்கூட்டியே தங்களது பெயர், கார் எண், காரின் மாடல், மது குடிக்கச் செல்லும் நேரம், வெளியே வரும் நேரம் போன்ற விபரங்களை எங்களது சங்கத்தில் பதிவு செய்து விட வேண்டும்.
பாதுகாப்பான பயணம்...
அதன் அடிப்படையில் எங்களது டிரைவர், சம்பந்தப்பட்ட நபருக்காக பாரின் வாசலில் காத்திருந்து, சரியான நேரத்திற்கு அவரை அழைத்துச் சென்று பாதுகாப்பாக அவரது வீட்டில் கொண்டு சேர்த்து விடுவார்.
சாலை விபத்துக்களைத் தடுக்க வேண்டும், அப்பாவி மக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் இந்த திட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம்.
கார் விபரம் கட்டாயம்...
இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் இது தொடர்பாக எங்களது சங்கத்தில் முன்பதிவு செய்வோர், மறக்காமல் தங்களது கார் அம்பாசிடரா, ஆடியா என்பது உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிக்க வேண்டும். அப்போது தான், அந்தந்த காருக்கேற்ற சரியான டிரைவர்களை நாங்கள் அனுப்பி வைக்க ஏதுவாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
விபத்தின் பாதிப்பு...
இந்தப் புதிய திட்டம் குறித்து மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க சாலை விபத்துத் தடுப்புப் பிரிவு பொருளாளர் செந்தில் கூறுகையில், "ஆடி காரை ஓட்டிச் சென்று ஐஸ்வர்யா என்ற பெண் விபத்து ஏற்படுத்தியதில் அப்பாவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். யாரோ மது குடித்து விட்டு அஜாக்கிரதையால் ஏற்படுத்திய விபத்தில் அப்பாவி பலியான சம்பவம் எங்களது மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
நல்லெண்ண அடிப்படையில்...
அதனைத் தொடர்ந்து தான் இந்தத் திட்டத்தை அமல் படுத்துவது குறித்து முடிவு செய்தோம். இந்தத் திட்டத்தில் பணியாற்றப் போகும் டிரைவர்கள் அனைவருமே சேவை அடிப்படையில் மட்டுமே செயல்படப் போகின்றனர். மற்றபடி அவர்களுக்கு ஊதியம் எதுவும் தரப்படப் போவதில்லை. மது போதையில் விபத்துக்களைத் தடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே இந்தத் திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறோம்" என்றார்.
சபாஷ் திட்டம்தான்..!
இந்தச் சங்கத்தின் குறிக்கோளே, ‘குடிப்பவர்களுக்கு புனரமைப்பு... குடிக்காதவர்களுக்கு பாதுகாப்பு' என்பது தான்.