உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் 24க்குள் நடத்த முடியாது- ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் சிரமம் ஏற்படும் என்று உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
சென்னை: ஏப்ரல் மாதம் 24ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது எனவும், மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆட்சி காலம் முடிவடைந்தது. இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், இடஒதுக்கீடு விவகாரத்தில் குளறுபடி இருப்பதாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலுக்கு இடைகால தடை விதித்தது. மேலும் திமுக அளித்துள்ள புகாருக்கு விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதற்கான விளக்கம் தேர்தல் ஆணையம் சார்பில் கொடுக்கப்பட்டது. அதில், போதிய விளக்கம் இல்லை என கூறிய நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை உத்தரவை நீடித்தது.
உள்ளாட்சித் தேர்தல்
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன், மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்தலுக்கான பணிகளை துவங்க அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால், தமிழக அரசு அதற்கான வேலைகளில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஹைகோர்ட்டில் வழக்கு
இதனிடையை சமூக ஆர்வலர் பாடம் நாராயணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், வரும் ஏப்ரல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
தேர்தல் ஆணையம் பதில்
ஏப்ரல் 24ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிடுமாறு, சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது. அதில் அடுத்த மாதம் 24ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
தேர்தலை நடத்துவதில் சிரமம்
மேலும் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ள மே 14ஆம் தேதிக்குள்ளும் தேர்தலை நடத்துவதும் இயலாது என தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் சிரமம் ஏற்படும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஏப்ரல் 3க்குள் பதில் தர உத்தரவு
இதனையடுத்து நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்ட மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பிட்ட தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்த முடியாது என்ற விளக்கத்தை வரும் ஏப்ரல் 3ஆம் தேதிக்குள் அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.